அதிகாரிகள் சொன்னாங்க செய்தோம்.. தெர்மாகோல் திட்டம் பற்றி அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்
நாகர்கோவில்: அதிகாரிகள் சொன்னதை வைத்து தெர்மாகோல் திட்டத்தைத் தொடக்கி வைத்தோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வைகை அணையில் நீர் ஆவியாதலை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் தெர்மாகோல் போட்டு மூட முயற்சித்தனர்.
ஆனால் பெரும் காற்று காரணமாக வைத்த 10 விநாடிகளுக்குள் அந்த தெர்மாகோல்கள் கரை ஒதுங்கியதால் இந்த முயற்சி கேலிக்குள்ளானது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த 10 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், தெர்மாகோல் திட்டம் தோல்வி குறித்து நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, இரண்டு மூன்று அதிகாரிகள் சொன்னதை வைத்து தெர்மாகோல் திட்டத்தைத் தொடக்கி வைத்தோம். அதில் சில குறைபாடு இருந்தது. அன்றைய ஏற்பாடு தவறாக இருந்திருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் நீர்நிலையைக் காக்க என்ன நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை ஆய்வு செய்வோம் என்று கூறினார்.