ரஜினி பற்றி கருத்து சொல்லப்போய்.. பெண்கள் மத்தியில் சர்ச்சையான அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி!
"ஆட்சியை பிடிப்பதெல்லாம், காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாமே தவிர, தமிழக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில்தான் இருக்கிறது" என்றார் செல்லூர் ராஜு.
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாமே தவிர தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது என்று, அமைச்சர் செல்லூர் ராஜு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாக உள்ள காலா திரைப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ரஜினிகாந்த், தென் இந்திய நதிகளை இணைப்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்றார்.
நதிநீர் இணைப்பு நடந்துவிட்டால், தான் கண்மூடினாலும் கவலையில்லை என உருக்கமாக பேசியிருந்தார் ரஜினிகாந்த்.
காலா சர்ச்சை
ஏற்கனவே காலா திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களில் அரசியல், புரட்சி கருத்துக்கள் அதிகம் உள்ள நிலையில், ரஜினிகாந்த்தின் பேச்சும் முக்கியத்துவம் பெற்றது. காலா திரைப்பட பாடல் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்த நிலையில், இன்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
நல்ல கருத்துதான்
நதிகள் இணைப்பு பற்றி ரஜினிகாந்த் பேசியுள்ளது பற்றிய உங்கள் கருத்து என்ன, என்று செல்லூர் ராஜுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, இணைப்பது நல்லதுதானே, நல்ல கருத்தைதானே கூறியுள்ளார். நிதி கொடுப்பேன் என கூறியுள்ளார் அவர் கொடுக்கட்டும். நாங்க எல்லாருமே அதைத்தானே விரும்புகிறோம். தமிழக மக்கள் எல்லோருமே விரும்புவது தென் இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பதுதான். அதில் அவர் ஒரு கருத்து அவ்வளவுதான். அதில் வேறு என்ன உள்ளது? என்றார் அமைச்சர்.
காரைக்குடி ஆச்சி
நதி நீர் பற்றி பேசி, தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க ரஜினிகாந்த் முயல்கிறாரா என்ற நிருபர் பதிலுக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, "ஆட்சியை பிடிப்பதெல்லாம், காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாமே தவிர, தமிழக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில்தான் இருக்கிறது" என்றார் செல்லூர் ராஜு.
பெண்களை சொல்லலாமா?
காரைக்குடி உள்ளிட்ட செட்டிநாடு பகுதிகளில், ஆச்சி என்பது மூதாட்டிகளை குறிப்பிட்டு அழைக்கும் பெயராகும். விவேக் ஒரு திரைப்படத்தில், "ஆட்சியா, ஆச்சியா, காரைக்குடி பக்கம் கேட்டாங்கன்னா பெரிய கலவரமே வந்துரும்டியேய்" என்று கூறியிருப்பார். எனவே, செல்லூர் ராஜுவின் கருத்து பெண்களை இழிவு செய்வதை போல உள்ளதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். வைகை அணையில் உள்ள தண்ணீர், ஆவியாகாமல் இருக்க தெர்மாக்கோலை போட்டு மூட முயன்று கடந்த வருடம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானவர் செல்லூர் ராஜு என்பது நினைவுகூறத்தக்கது.