கருணாநிதி நினைவிட பிரச்சனையில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: செல்லூர் ராஜூ
கருணாநிதி நினைவிட பிரச்சனையில் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
திருச்சி: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த கருணாநிதிக்கு இடம் கேட்டு முதலமைச்சரிடம் கெஞ்சினோம் என்று அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"அதிமுகவுடன் திமுகவை ஒப்பிட்டு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையதல்ல. அரசியல் முதிர்ச்சியற்றவர் ரஜினிகாந்த். நேரத்துக்கு, நேரம் மாறுபட்டு பேசக் கூடியவர். அதிமுக தொண்டர்களும், திமுக தொண்டர்களும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டவர்கள். இரு கட்சிகளுக்கும் மாறுபட்ட கொள்கை உள்ளது. திமுகவும், அதிமுகவும் சந்திரன், சூரியன் போன்றது. எம்ஜிஆர் மீது தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகளின் காரணமாகவே அதிமுக உருவானது. திமுகவால் அதிமுக உருவானதாக கூறுவது ஏற்புடைய கருத்தல்ல.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததைத் தொடர்ந்து அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க திமுக கோரியது. ஆனால், சட்ட சிக்கல்கள் இருந்ததால் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஜெயலலிதா நினைவிடத்தை எதிர்த்து தொடரப்பட்ட 2 வழக்குகள் உள்பட 5 வழக்குகள் நிலுவையில் இருந்தது. இரவோடு இரவாக வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதால் இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அரசு அதிகாரிகள் மூலம் பணிகளை விரைவுபடுத்தி மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. ராஜாஜி அரங்கம் ஒதுக்கியது. 7 நாள் அரசு துக்கம் அறிவித்தது. அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது என சகல அரசு மரியாதைகளும் கருணாநிதி மறைவுக்கு அளிக்கப்பட்டது.
ஆனால், கருணாநிதி மறைவை வைத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கீழ்த்தரமான அரசியலை நடத்தி வருகிறார்.
திமுகவில் நிச்சயம் பிளவு ஏற்படும். அழகிரியின் அரசியல் பணி குறித்து மதுரையில் உள்ள எனக்கு நன்கு தெரியும். அழகிரியின் திறமை, ஆற்றல், தேர்தல் காலத்தில் பணியாற்றும் பாங்கு ஆகியவை எனக்குத் தெரியும். என்ன நடக்கிறது என்பதை காத்திருந்து பார்ப்போம்" என்று கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி, எம்பிகள் டி.ரத்தினவேல், ப.குமார், எம்எல்ஏக்கள் செல்வராஜ், பரமேஸ்வரி உள்பட பலர் உடன் இருந்தனர்.