யாருக்கும் பயப்பட மாட்டோம்... மக்கள் தான் எங்கள் எஜமானர்கள்.. சீறும் செல்லூர் ராஜூ!
தமிழக அரசு யாருக்கும் பயந்து போகாது, எங்களுடைய எஜமானர்கள் தமிழக மக்கள் தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : தமிழக அரசு யாருக்கும் பயந்து போகாது என்றும் தங்களுடைய எஜமானர்கள் தமிழக மக்கள் தான் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது யாருக்கும் பயந்து போகும் அரசு தமிழக அரசு இல்லை. எங்களுடைய எஜமானர்கள் எங்களுடைய நீதிமான்களாக நாங்கள் கருதுவது மக்கள் தான். எங்களுக்கு வாக்களித்து எங்களை ஆட்சியில் அமர வைத்த மக்கள் தான் எங்களுடைய எஜமானர்கள்.
மக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. மாநில உரிமையை திமுகவை விட அதிமுக எப்போதுமே விட்டுக் கொடுக்காது. திமுக ஆட்சியில் தான் மாநில சுயாட்சி மத்திய அரசுக்கு அடிமையாக இருந்தது. அவர்களின் அனைத்து திட்டங்களையும் ஏற்றுக்கொண்டார்கள்.
வாய்மூடி அப்போது மவுனமாக இருந்தார்கள். உரமானியத்தை மத்திய அரசு ரத்து செய்த போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து அதில் கையெழுத்து போட்டனர். கெயில் திட்டம், எரிவாயு திட்டம் எல்லாம் அவர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்டது.
விவசாயிகளுக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்த முற்பட்ட போது 2015ம் ஆண்டில் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். ஜிஎஸ்டியில் திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பதற்கும் தமிழகத்தின் வற்புறுத்தலும் முக்கிய காரணம்.இதனாலேயே இன்று ஏராளமான பொருட்களுக்கான வரி குறைந்துள்ளது. திமுகவைக்காட்டிலும் மோசமாக நிச்சயம் எங்களுடைய அரசும், கட்சியும் இருக்காது என்று செல்லூர் ராஜூ சரவெடியாக வெடித்து தள்ளிவிட்டார்.