அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது ஏன் தெரியுமா? 'செங்ஸின்' கண்டுபிடிப்பு
மக்கள் தொகை குறைந்து வருவதால் அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்கள் தொகை குறைந்து வருவதால் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தனியார் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்வது குறித்த கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
மார்ச் ஒன்றாம் தேதி மூலம் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் தொடங்குகின்றன,இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை செய்தார்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு எழுதும் மாண 8 லட்சத்து 67 ஆயிரம் பேரும், பிளஸ் 1 மாணவர்கள் 8 லட்சத்திற்கு மேற்பட்டோரும் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக கூடுதலாக 500க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் எந்த பிரச்னையும் எழாமல் இருக்க பறக்கும்படை, கூடுதல் ஆசிரியர்கள் கண்காணிப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாணவர்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது?
மக்கள் தொகை குறைந்து வருவதால் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதற்கு செய்தியாளர்கள் எதிர் கேள்வி எழுப்பினர்.
ஷாக்கான செய்தியாளர்கள்
அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளில் அதிக அளவிலான மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதுவதாகவும் கேட்டனர். மேலும் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அரசுப் பள்ளியில் மற்றும் ஏன் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினர்.
சுதாரிப்பாக பதில் அளித்த அமைச்சர்
இதற்கு பதிலளித்த அமைச்சர் தனியாருக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது என்பதை உங்களால் உணர முடிகிறது. நாங்களும் அதனை உணர்ந்து தான் கல்வித் தரத்தில் மாற்றம் கொண்டு வருகிறோம்.
அடுத்த ஆண்டில் கூடும்
அடுத்த ஆண்டு 1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பாட மாற்றம் செய்யப்படுகிறது. மாற்றங்கள் வரும் போது அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்றார்.