நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை: நீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்த வலியுறுத்துவோம் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஞாயிற்றுக்கிழமை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது செய்தியாளர்கள் நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் இது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினர், இந்த கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்துவது குறித்து மத்திர அரசிடமிருந்து எங்களுக்கு கடிதம் எதுவும் வரவில்லை. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் வலிறுத்துவோம் என்று தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் ஒரு மணி நேரமும் விடுமுறை நாட்களில் 3 மணி நேரமும் பயிற்சி அளிக்கப்படும்.
தமிழகத்தில் மேலும், 100 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகள் உருவாக்குவது பற்றி நாளை அறிவிக்கப்படும்.
அனைவருக்கும் வேலை என்ற உத்தரவாதத்துடன் 12-ஆம் வகுப்பிலேயே மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது." என்று தெரிவித்தார்.