இறைவனிடம் கையேந்துங்கள்...பைபிளில் சொல்லப்பட்டுள்ளதாம்... சொல்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
இறைவனிடம் கையேந்துங்கள் என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: இறைவனிடம் கையேந்துங்கள் என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இன்று தைப்பூச திருவிழாவையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சம்பந்தி போஜனம் நடைபெற்றது. இதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
அப்போது இறை வழிபாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், இறை வழிப்பாட்டை என்றைக்குமே நேசிக்க கூடிய மதசார்பற்ற அரசாக இந்த அதிமுக விளங்குகிறது. அதன் அடிப்படையில் கீதையில் குறிப்பிட்டதை போல கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா என்று இந்து மதம் கூறுகிறது.
அதுபோல் பைபிள் என்ன சொல்கிறது என்றால் இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை என்கிறது. அதுபோல் கிறிஸ்துவ மதத்தை பொருத்தவரையில் தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்கிறார்கள். ஆகவே இறைவனிடம் சென்றால் எல்லாம் கிடைக்கும் என்பதுதான் மதத்தினுடைய தத்துவங்களாக இருந்து கொண்டிருக்கின்றன என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் முஸ்லிம்களின் வழிப்பாட்டு பாடலாகும். அதை பைபிளில் கூறியுள்ளதாக அமைச்சர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முஸ்லிம்களின் புனிதநூல் குறித்தும் அவர் தெரிவித்தாரா இல்லையா என்பது குறித்தெல்லாம் கவலைக் கொள்ளாமல் அவர் பாட்டுக்கு பேசி கொண்டிருந்தார்.
இதுபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை சுஹாசினியின் பெயரை தவறாக உச்சரித்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொண்டார். தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பள்ளிக் கல்வி துறை அமைச்சரே இதுபோன்ற தவறாக பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.