ரஜினிகாந்த்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி.. ஏன் தெரியுமா?
தமிழக கல்வித் துறையையும் அமைச்சரையும் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் கல்வியில் சிறப்பாக உள்ளது என்றும், அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் பாராட்டியதற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்பு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, செங்கோட்டையனிடம் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் பிற மாநிலங்களை ஒப்பிட்டால், கல்வி சிறப்பாக உள்ளது என்றும், அமைச்சர் செங்கோட்டையன், சிறப்பாக செயல்படுவதாகவும் பாராட்டு தெரிவித்தது குறித்து கருத்து கேட்டனர்.
அதற்கு, நடிகர் ரஜினிகாந்த்தின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அமைச்சர் செங்கோட்டையன் அரசு சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பதாக கூறினார்.
அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் மேலும், கூறியதாவது: தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களில் கல்வித்துறை சார்பாக ஐஏஎஸ் அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சி.ஏ. என்கிற பட்டயக் கணக்காளர் கல்வி படிப்பதற்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் அடுத்த 2019 ஆம் ஆண்டு முதல் ஆண்டு 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் திறன் வளர்ப்பு பயிற்சி பாடம் கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் படித்து முடித்தவுடன் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இதேபோல, சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்துக்கு, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.