அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புது யூனிஃபார்ம்.. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
சென்னை: தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு புதிய சீருடை மாற்றப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை 1200-ல் இருந்து 600 ஆக குறைத்தது. 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம், பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்பு, ஸ்மார்ட் வகுப்புகள என பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பச்சை நிற அரைகால் சட்டையும், இளம்பச்சை நிறக் கோடிட்ட மேல் சட்டையும் சீருடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பழுப்பு நிறத்தால் ஆன முழுக்கால் சட்டையும், பழுப்பு நிறத்தால் ஆன கோடிட்ட மேல் சட்டையும் சீருடையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மாணவ மாணவிகளுக்கு தலா 4 செட் சீருடைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சீருடை திட்டம் வரும் கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரால் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.