தினகரனுக்கு பதவி வெறி தலைக்கு ஏறிவிட்டது, விரைவில் சசிகலாவையும் நீக்கி விடுவார்.. தங்கமணி தாக்கு
தினகரனுக்கு பதவி வெறி தலைக்கு ஏறிவிட்டது என அமைச்சர் தங்கமணி சரமாரியாக சாடியுள்ளார்.
Recommended Video
தஞ்சை: தினகரனுக்கு பதவி வெறி தலைக்கு ஏறிவிட்டது என அமைச்சர் தங்கமணி சரமாரியாக சாடியுள்ளார்.
சசிகலா குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சனை தற்போது வீதிக்கு வந்துள்ளது. சசிகலாவின் சகோதரரான திவாகரன், டிடிவி தினகரன் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.
இந்நிலையில் தினகரனும் பதிலுக்கு திவாகரனை விமர்சித்து வருகிறார். விவேக் ஜெயராமன், ஜெயானந்த் என ஒட்டுமொத்த சசிகலா குடும்பமும் தினகரனுக்கு எதிராக திரும்பியுள்ளது.
சேர்க்க மாட்டோம்
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர்தங்கமணி பங்கேற்றார். அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, சசிகலா குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்க்க மாட்டோம் என தெரிவித்தார்.
திவாகரனுக்கே இந்த நிலைமை
டிடிவி தினகரனிடம் யார் எல்லாம் கேள்வி கேட்கிறார்களோ அவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்குகிறார், அவருக்கு தூணாக இருந்த திவாகரனுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் தங்கமணி தெரிவித்தார்.
தினகரனின் பதவி வெறி
ஆனால் டிடிவி தினகரன் குடும்பம் எப்படி இருந்தாலும் அவர்களை நாங்கள் சேர்க்க மாட்டோம் என்பதில் மாற்று கருத்து இல்லை, இந்த அளவுக்கு டிடிவி தினகரன் குடும்பம் மாறியுள்ளதற்கு காரணம் தினகரனின் பதவி வெறிதான் என்றும் தங்கமணி கூறினார்.
சசிகலாவையும் நீக்குவார்
டிடிவி தினகரனுக்கு பதவி வெறி தலைக்கு ஏறி விட்டதால், கூடிய விரைவில் சசிகலாவையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு நான் தான் கட்சி என்று சொல்லுவார், அவருக்கு பதவி மட்டும்தான் குறிக்கோள், குடும்பத்தைப் பற்றியோ, மக்களை பற்றியோ, கட்சியைப் பற்றியோ கவலை இல்லை என்றும் அமைச்சர் தங்கமணி விமர்சித்தார்.