4 எம்.எல்.ஏக்களை ஆசைகாட்டி அழைத்துச் சென்றார் அமைச்சர் உதயகுமார்... புகழேந்தி பரபரப்பு
மேலூர் பொதுக்கூட்டத்துக்கு வரவிருந்த 4 எம்.எல்.ஏக்களை ஆசை காட்டி தங்கள் பக்கம் அழைத்துச் சென்றுள்ளார் அமைச்சர் உதயகுமார் என்று டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத
மதுரை: நேற்று நடந்த டிடிவி தினகரனின் பொதுக்கூட்டத்துக்கு, வருவதாக இருந்த 4 எம்எல்ஏக்களை அமைச்சர் உதயகுமார் ஆசைகாட்டி அழைத்துச் சென்று விட்டார் என்று கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேற்று மதுரை மேலூரில், டிடிவி தினகரன் சார்பில் நடத்தப்பட்டது. அதில் 20 எம்.எல்.ஏ.க்களும், 7 எம்.பி.க்களும் கலந்துகொண்டனர்.
இதன் மூலம் தினகரனுக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கலக்கத்தில் உள்ளனர்.
அவர்கள் தினகரன் ஆதரவாளர்கள் என்பதால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் பரவின. இதனால் அதிமுக பிரமுகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளரும் கர்நாடகா மாநில அதிமுக செயலாளருமான புகழேந்தி மதுரையில் பேட்டியளித்தார். அப்போது அவர், " மேலூர் பொதுக்கூட்டத்துக்கு பணத்தைக் கொடுத்து கூட்டம் கூட்டப்படவில்லை. தானாகவே தொண்டர்கள் எழுச்சியாக வந்தனர்.
பொதுக்கூட்டத்துக்கு, வருவதாக இருந்த 4 எம்எல்ஏக்களை அமைச்சர் உதயகுமார் ஆசைகாட்டி அழைத்துச் சென்று விட்டார். ரஜினிகாந்த் 30 ஆண்டுகாலமாக அரசியலுக்கு வருவதாகக் கூறி வருகிறார். அதனால் எல்லாம் ஒன்றும் நிகழ்ந்துவிடாது" என்று கூறினார்.