பற்றி எரிந்த சென்னை சில்க்ஸ் கட்டடத்தை என்ன செய்யலாம்.. கமிஷனருடன் அமைச்சர் அவசர ஆலோசனை
இரண்டு நாட்களாக பற்றி எரிந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்று வருகிறது.
சென்னை: இரண்டு நாட்களாக சென்னை சில்க்ஸ் கட்டடம் கொழுந்துவிட்டு எரிந்தது. இது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் அமைச்சர் உதயகுமார் தலைமையில் சென்னை கமிஷனர் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்று வருகிறது.
தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் போராடி அணைத்தனர்.
இந்நிலையில், தீ கட்டுக்குள் வந்துள்ளதாகவும் தீ கங்குகளை முற்றிலுமாக அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இடிப்பு
தீ முற்றிலும் அணைந்த பின்னர், இந்தக் கட்டடத்தை அரசே இடித்துத் தள்ளும். பக்கத்து கடைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் கட்டடம் இடிக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
ஆய்வுக்குழு
கட்டடம் இடிக்கும் போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஐஐடியின் தொழில் நுட்ப வல்லுநுர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வை முடித்த பின்னர், எந்த விதத்தில் கட்டடத்தை இடிப்பது என்று முடிவெடுக்கப்பட உள்ளது.
அவசர ஆலோசனை
இந்நிலையில், சென்னை கமிஷனர் விஷ்வநாதனுடன் அமைச்சர் உதயகுமார் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அவர்களுடன் அரசு அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அடுத்த நடவடிக்கை என்ன?
தி. நகர் பகுதியின் பாதுகாப்பு, போக்குவரத்து, கட்டட இடிப்பின் போது கொடுக்க வேண்டிய பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.