சிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம்- அமைச்சர் உதயகுமார் பேச்சால் சர்ச்சை
சிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம் என்று அமைச்சர் உதயகுமார் பேசியுள்ளார்.
ஆரணி: சிலர் செத்தால்தான் நாட்டுக்கே விமோசனம் என்று மெரினா வழக்கு வாபஸ் குறித்து அமைச்சர் உதயகுமார் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதி உயிருடன் இருந்த போதே தான் இறந்தால் அண்ணா சமாதிக்கு பக்கத்தில் 6 அடி நிலம் ஒதுக்க வேண்டும் என்று விரும்பியிருந்தார். இந்நிலையில் அவர் கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
இதையடுத்து கருணாநிதியின் விருப்பத்தை நிறைவேற்ற ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் சென்று மனு அளித்தனர். ஆனால் தமிழக அரசோ கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.
மெரினாவில் இடம்
ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதை தமிழக அரசு காரணம் காட்டியது. இதையடுத்து திமுகவினர் உயர்நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து கருணாநிதிக்காக வழக்குகள் இரவோடு இரவாக வாபஸ் பெறப்பட்டன. பல்வேறு கட்ட சூடான விவாதங்களுக்கு பிறகு கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
சர்ச்சை கருத்து
இதையடுத்து அவரது உடல் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வழக்கு வாபஸ் குறித்து பேசிய அமைச்சர் உதயகுமார் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட முயற்சித்த போது வழக்கு மேல் வழக்கு போட்டார்கள்.
வழக்கு வாபஸ்
கருணாநிதிக்கு இடம் கேட்டபோது அங்கு நிறைய வழக்கு இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். விடிந்தவுடன் எல்லா வழக்குகளையும் வாபஸ் பெற்று விட்டனர்.
வழக்கு எப்படி வாபஸ்
இதை மக்களிடம் கூறியபோது எங்களுக்கும் வழக்குக்கும் சம்பந்தமே இல்லை என்றார்கள். ஆனால் உங்களுக்கு ஒன்று என்ற போது வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்டார்கள். இப்ப ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது சிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம் கிடைக்கிறது என்றார் அவர்.
உதயகுமார் ஜெ.வையும் சொல்கிறாரா
கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட சில முக்கியத் தலைவர்கள் மரணமடைந்தனர். அவர்களை மனதில் வைத்து அமைச்சர் உதயக்குமார் இப்படிச் சொல்லியுள்ளாரா என்பது தெரியவில்லை.