கண் திருஷ்டியால் உடைந்தது முக்கொம்பு அணை மதகுகள்... முழுசா செல்லூராராகவே மாறிய உதயகுமார்
விருதுநகர்: பலரின் கண் திருஷ்டி காரணமாக முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்தன என விருதுநகரில் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
முக்கொம்பு அணையின் மதகுகள் காவிரி நீரின் வேகம் தாளாமல் உடைந்து விட்டன. இதை சரி செய்ய பொதுப் பணி துறை அதிகாரிகள் சார்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விருதுநகரில் அரசு நலத்திட்ட விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில் ஊழல் புகாரில் சிக்கியவர்கள் பதவி விலக வேண்டும் என கூறுபவர்கள் முன்னுதாரணமாக இருந்துள்ளார்களா.
மக்கள் சார்ந்த நலன்
ரஜினி உள்ளிட்டோர் மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அரசியலுக்கு வர வேண்டும். நாடி ஜோசியத்தை நம்பி பார்க்கக் கூடாது. திமுகவும் அமமுகவும்தான் அதிமுகவுக்கு எதிரிகள். தினகரன் தன்னை முன்னிலைப்படுத்துகிறாரே தவிர மக்கள் சார்ந்த நலன் அவரிடம் இல்லை.
வித்தியாசமான பேச்சுகள்
பலரின் கண் திருஷ்டி காரணமாக முக்கொம்பு அணையின் உடைந்துவிட்டன என்றார் அவர். இதை கேட்ட கட்சியினரே சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டனர். அதிமுக அமைச்சர்கள் பேசும் வித்தியாசமான பேச்சுகள் உடனடியாக சமூக வலைதளங்களில் பரவுகிறது.
உதயகுமார்
இதை பார்த்த நெட்டிசன்கள் வழக்கமாக செல்லூர் ராஜூதான் இதுபோல் பேசி வருவார். தற்போது அந்த பட்டியலில் உதயகுமாரும் சேர்ந்து விட்டார் என்றனர். இன்னும் சிலரோ முழுசாக செல்லூராராகவே மாறிய உதயகுமார் என்று கருத்து தெரிவித்தனர்.
ஜெ.ஆன்மா
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற கட்சி விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயகுமார், ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிச்சாமியின் உடம்பில் புகுந்து விட்டது என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.