கொச்சி வழியாக சரக்கு விமானத்தில் டெல்லிக்கு போன பணம்...தினகரனுடன் சேர்ந்து சிக்கும் அமைச்சர் 'உடுமலை
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசிய வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி போலீசாரின் பிடியில் வசமாக சிக்கியுள்ளார். தினகரனுக்கு முழு உதவியாக இருந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும் இவ்வழக்க
சென்னை: இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி விலை பேசிய வழக்கில் அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, உதவியாக இருந்தவர்களை கணக்கெடுத்து,ஒவ்வொருவராக விசாரணை செய்து வருகிறார்கள் டெல்லி போலீசார்.
இந்த வழக்கில் ஹவாலா மோசடி பேர்வழிகள் உதவியோடு கொச்சியிலிருந்து பணம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது என்பதை டெல்லி போலீசார் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதனால் விசாரணையைத் தமிழகத்திலும் கேரளாவிலும் தீவிரப்படுத்தியுள்ள டெல்லி போலீசார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது கண் வைத்துள்ளனர்.
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பல ஆண்டுகளாக டிடிவி தினகரனுடன் நெருங்கிய தொடர்புகளில் இருந்துவரும் நபர். பல்வேறு தொழில் தொடர்புகளில் இருவரும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் என்பதை மோப்பம் பிடித்துள்ள டெல்லி போலீசார் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் சென்னையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தினகரனின் பணம் கொச்சி விமான நிலையத்திலிருந்து சரக்கு விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம்; இதற்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவினார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஆகையால் கொச்சி விமான நிலைய பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்களை டெல்லி போலீஸ் ஆராய உள்ளது.