"அம்மா" விடுதலை... "டம்மு டம்மு"ன்னு தேங்காய் உடைத்த வளர்மதி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதைத் தொடர்ந்து தற்போது நேர்த்திக் கடன் நடவடிக்கைகளில் அதிமுகவினர் படு பிசியாக உள்ளனர்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலையாகி விட்ட ஜெயலலிதாவுக்காக தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
பலர் கோவில்களில் பொங்கல் வைத்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் தங்களது டியூட்டியை தொடர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் அமைச்சர் பா. வளர்மதி தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார்.
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி செயலாளரும் 118 வது வார்டு கவுன்சிலருமான டி.சிவராஜ் ஏற்பாட்டில் தேனாம்பேட்டையில் உள்ள ஸ்ரீ ஆனந்த் சாய் தாம் பாபா திருக்கோவிலில் சமூக நலம் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் பா.வளர்மதி சிறப்பு அபிஷேகம் செய்து நேர்த்தி கடனாக 108 தேங்காய் உடைத்து அன்னதானம் செய்து வழிபட்டார்.
இதில் அவருடன் ஏராளமான அதிமுக பிரமுகர்களும் கலந்து கொண்டு ஆளுக்கு ஒரு தேங்காயை உடைத்து வழிபட்டனர். தேங்காய் உடைத்தபோது அம்மா வாழ்க என்று கூறி உடைத்தனராம்.
ஏற்கனவே உடைத்த பபிதா
ஏற்கனவே போயஸ் கார்டனுக்கு வந்த முன்னாள் கவர்ச்சி நடிகை பபிதாவும் இதேபோல சாலையோர கோவிலில் 108 தேங்காய்களை உடைத்து கொண்டு வந்த கோணிப் பையிலேயே அந்த உடைந்த தேங்காய்களையும் போட்டு எடுத்துச் சென்றார் என்பது இங்கு நினைவுகூறத்தக்கதாகும்.