ஈரத் துணியுடன் அதிகாலையில் பிடாரி இளங்காளியம்மன் கோவிலில் பா. வளர்மதி...!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அமைச்சர் பா. வளர்மதி, சென்னை கோவிலில் அதிகாலையில் குளித்து ஈரத் துணியுடன் தீச்சட்டி ஏந்தி வழிபாடு நடத்தினார்.
அதிமுக. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் சென்னை சைதாப்பேட்டை பிடாரி இளங்காளியம்மன் கோவிலில் அமைச்சர் பா. வளர்மதி தீச்சட்டி ஏந்தி வழிபாடு நடத்துவது வழக்கம்.
24 வது ஆண்டாக இந்த ஆண்டும் அதிமுக இலக்கிய அணி சார்பில் நேற்று தீச்சட்டி ஏந்தி வழிபாடு நடத்தினார். இதையொட்டி அதிகாலை 5 மணியளவில் ஈர ஆடையுடன் கோவிலுக்கு வந்தார். ஜெயலலிதாவின் 67 வது பிறந்த நாள் என்பதால் அவருடன் 66 பெண்களும் பிரார்த்தனையில் பங்கேற்றனர். அம்மனுக்கு கற்பூர ஆரத்தி எடுத்ததும் அமைச்சர் பா.வளர்மதி உள்பட 67 பெண்களும் தீச்சட்டி ஏந்தினார்கள்.
அனைவரும் 3 முறை கோவிலை வலம் வந்து அம்மன் சன்னதியில் தீச்சட்டியை இறக்கினார்கள். பின்னர் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆகிடவும், நீடூழி வாழவும் வேண்டி அவரது பெயர், நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்து மனம் உருக பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் தொழு நோயாளிகள் 200 பேருக்கு போர்வை, சாப்பாட்டு தட்டு, ஏழைகளுக்கு சேலை உள்பட 670 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர்களுக்கு காலை உணவும் வழங்கினார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த வழிபாட்டில் செந்தமிழன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.