அவிங்க குடிச்சாதாங்க ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியும்- தமிழக அமைச்சர் பேச்சால் சர்ச்சை
திருப்பத்தூர்: டாஸ்மாக் வருமானத்தில்தான் புதிய பள்ளிகள் கட்டப்படுகின்றன, பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது என்று வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி பேதியதால் சர்ச்சை எழுந்தது.
பொதுமக்கள் குடித்தால்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும்- அமைச்சர் வீரமணி
வேலூர் மாவட்டம் சின்னமூக்கனூரில் நேற்று பள்ளித் திறப்பு விழா ஒன்று நடந்தது. இந்த விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி கலந்து கொண்டு பேசினார்.
புதிய பள்ளிகள் திறப்பு
அப்போது அங்கு குடித்துவிட்டு முதியவர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீஸார் அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், டாஸ்மாக் கடை வருமானம் அனைத்தும் என் துறைக்குத்தான் வருகிறது. அதிலிருந்துதான் புதிய பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
குடிக்க வேண்டாம்
ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது ரகளையில் ஈடுபட்ட அந்த முதியவரை நான் குடிக்க வேண்டாம் என்று சொன்னால் இந்த பணிகள் எல்லாம் கெட்டுப்போய்விடும் என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
படிப்படியாக மூடல்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியிலும் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படுவது என்பதுதான் என்பதை அமைச்சர் மறந்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெ. கூறியிருந்தது
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தாய்மார்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர். அவ்வாறு திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை டிஎஸ்பி ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. டாஸ்மாக் கடைகளை அகற்றினால் மக்கள் கள்ளச்சாராயத்தை நாடி சென்றுவிடுவர் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.
சலசலப்பு
எனினும் மக்களின் கோரிக்கையை ஏற்று படிப்படியாக குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் அமைச்சர் வீரமணியோ மக்கள் குடித்து நாசமானாலும் பரவாயில்லை, வருமானம் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்ற தொனியில் பேசியது ஆச்சரியத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.