விமர்சனம் செய்வதை நிறுத்தாவிட்டால்.. கமலை மறைமுகமாக மிரட்டும் அமைச்சர் வேலுமணி
வருமான வரி என்பது மத்திய அரசுடன் தொடர்புடையது. ஆனால் திரைப்படங்களுக்கு கமல் செலுத்திய வரியை ஆய்வு செய்யட்டுமா என்று அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்புகிறார். இது எந்த வரியாக இருக்கும்.
சென்னை: நடிகர் கமல்ஹாசன் செலுத்திய வருமான வரியை ஆய்வு செய்யப்போவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். வருமான வரி மத்திய அரசுடன் தொடர்புடைய துறை எனும் நிலையில் வேலுமணி இவ்வாறு கூறியுள்ளது மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள காயத்ரி ரகுராம், 'சேரி பிஹேவியர்' என்று இழிவாக பேசியுள்ளார். இதற்கு மக்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கமலை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், சென்னை காவல் துறை ஆணையரிடம் மனு அளித்தார்.
அனைத்து துறைகளிலும்
இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர, செய்தியாளர்களை கமல் சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இது தமிழக அமைச்சர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல் குறிப்பிட்டு சொல்லட்டும்
இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாகப் பொதுவாகப் புகார் கூறக் கூடாது. எந்தத் துறையில் ஊழல் இருக்கிறது என்று நடிகர் கமல் குறிப்பிட்டுக் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
ஆதாரமில்லாமல் பேசுவதா
கமலின் இந்த கருத்து குறித்து அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறுகையில் சமீபலகாலமாக கமல் ஆதாரமில்லாமல் பேசி வருகிறார். சினிமாவுக்கு கேளிக்கை வரி பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு திரைதுறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
நிறுத்த வேண்டும்
இதை கமல் நன்கு தெரிந்திருந்தும் இப்படி ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை ஏன் முன்வைக்கிறார்.அதிமுக அரசை குறை கூறுவதை கமலஹாசன் இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும். எங்கள் அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. கமலஹாசன் இதுவரை அவர் நடித்த படங்களுக்கு எவ்வளவு வரி கட்டினார் என்பதை அவர் விளக்குவாரா? ஆய்வு செய்யட்டுமா? என்றார்.
வருமான வரி எதனுடன் தொடர்புடையது
வருமான வரி என்பது மத்திய அரசுடன் தொடர்புடையது. இதை அத்துறை சார்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மட்டுமே செய்வர். அவ்வாறிருக்க, வரியை ஆய்வு செய்யட்டுமா என்று வேலுமணி கூறியிருப்பது எந்த வரியை என்று பொதுமக்கள் கேட்கின்றனர்.
இதுகூட தெரியலையா
வருமான வரி துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை கூட தெரியாமலா அமைச்சராக உள்ளார்? வாய்க்கு வந்தபடி கமல் பேசக் கூடாது என்று அறிவுறுத்தும் இவர் வாய்க்கு வந்தபடி அதுவும் தவறான தகவலை அளிக்கலாமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.