குட்கா ரெய்டுகளுக்கு நடுவே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு புரமோஷன் கொடுத்த அதிமுக தலைமை
சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ இவரது வீட்டில் சமீபத்தில் ரெய்டு நடத்திய நிலையிலும் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று இரண்டாவது நாளாக தலைமை கழகத்தில் உயர்மட்ட ஆலோசனை நடத்தினர்.
இதில் மூத்த அமைச்சர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணியினருக்கு சம வாய்ப்பு தரும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன என்பது, அதிமுக வெளியிட்டு உள்ள பட்டியலை பார்க்கும் போது தெரிய வருகிறது.
அதிமுகவின் சட்ட ஆலோசகராக பி.ஹெச்.பாண்டியன் நியமிக்கபட்டுள்ளார்.
கழக அமைப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முத்துராமலிங்கம், மதுரை திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். தற்போது அருகில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரவுள்ளதால் முத்துராமலிங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். ஓபிஎஸ் அணி இவர்.
இதேபோல அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக காஞ்சி பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வரும் 19ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.