வீடு வீடாக நிலவேம்பு கசாயம்.. தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்!
சென்னையில் வீடு வீடாக நிலவேம்பு கசாயம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை: வீடு வீடாக நிலவேம்பு கசாயம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் தாண்டவமாடி வருகிறது. டெங்கு காய்ச்சலால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.
10 மாடி உயரம் வரை புகை
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொசுக்களை கட்டுப்படுத்த அரசு நிதி ஒதுக்கி உள்ளதாக கூறினார். இதன்மூலம் 10 மாடி உயரம் வரை புகையை வெளிப்படுத்தும் கருவி வாங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
வீடு வீடாக நிலவேம்பு
குப்பை, சாக்கடையால் டெங்கு காய்ச்சல் பரவாது என்றார். சென்னையில் வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
3 நாளில் 50 ஆயிரம் பேருக்கு
சென்னையில் 3 நாளில் 50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 35 வாகனங்களில் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
10 ஆயிரம் பேர் நலம்
நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் லிட்டர் நில வேம்பு குடிநீர் தயாரிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். மேலும் ஒராண்டில் டெங்கு பாதித்த 10 ஆயிரம் பேர் பூரண நலம் பெற்றனர் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.