நாளைக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை பாயாது.... போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அமைச்சர் வார்னிங்
நாளைக்குள் பணிக்கு திரும்பும் ஊழியர்கள் மேல் எந்தவித நடவடிக்கையும் பாயாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரித்தார்.
சென்னை: வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை பாயாது என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2.57 சதவீதம் ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர்கள் 5-ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியலும் நடத்தப்படுகிறது. இதனால் பேருந்துகள் போதிய அளவு இயங்கவில்லை.
குறைந்த அளவிலான பேருந்துகளை அண்ணா தொழிற்சங்கத்தினரும், தற்காலிக ஓட்டுநர்களும், ஆட்டோ டிரைவர்களும் இயக்கி வருகின்றனர். இதனால் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். வேலை நிறுத்தம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், நாளைக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாது.
மீறினால் துறை ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளும் பாயும். பாதியில் பேருந்தை நிறுத்தியவர்கள், பேருந்து கண்ணாடிகளை உடைத்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.