டெங்கு காய்ச்சல் மரணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் பாதியில் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர்
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்கு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் பாதியிலேயே எழுந்து சென்றார்.
சென்னை: டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் நாமக்கல்லில் டெங்கு காய்ச்சலால் 8 சிறார்கள் உயிரிழந்த சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெங்குவை தடுக்கும் விதமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனையில் விழிப்புணர்வு பிரசாரத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
அப்போது வீடு வீடாக நில வேம்பு கசாயத்தை வழங்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளிக்கையில், நாமக்கல்லில் குழந்தைக்கு டெங்கு இருந்ததால் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கேட்கிறீர்கள்.
டெங்கு விழிப்புணர்வு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அப்போதுதான் இந்த தடுப்பு முறைகள் அனைவரையும் போய் சேரும் என்று மழுப்பலாகவே பதிலளித்தார். டெங்குவுக்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்விக்கு செய்தியாளர்கள் ஏன் பழைய கேள்விகளையே கேட்கிறீர்கள் என்று கூறினார்.
மேலும் புதிய கேள்விகளை கேட்குமாறு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து காலம் தாழ்ந்த நடவடிக்கையால்தான் நாமக்கல்லில் டெங்குவால் 8 சிறார்கள் உயிரிழந்தனர் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர், காலம் தாழ்ந்த நடவடிக்கை என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்.
கடந்த 3 மாதமாக என்னுடன் இருந்து பார்த்துவரும் நிலையில் காலம் தாழ்ந்த நடவடிக்கை என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டு அவர் உரிய பதில் அளிக்காமல் எழுந்து சென்றுவிட்டார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.