நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் அவசர சட்டம் மத்திய அரசிடம் நாளை தாக்கல்- அமைச்சர் விஜயபாஸ்கர்
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் அவசர சட்டம் மத்திய அரசிடம் நாளை தரப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் புதிய அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் நாளை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் அந்த தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு எத்தனையோ முறை கோரிக்கை விடுத்துவிட்டது. ஆனால் நிரந்தரமாக விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது.
சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழக அரசு, நீட் தேர்விலிருந்து 2 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கக் கோரி அவசர சட்ட வரைவை மத்திய அரசிடம் கொடுத்தது. அது இன்னமும் நிலுவையில் உள்ளது.
தொடர்ந்து வலியுறுத்தல்
இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு தகர்க்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பலமுறை எடுத்துரைத்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்தின் பதவியேற்பு விழாவுக்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிரதமர் மோடி, சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவிடமும் கோரிக்கை விடுத்தனர்.
ஏமாற்றம்தான்...
அப்போது அவசரச் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதால் அன்றைய தினமே நீட் தேர்வுக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கும் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று கல்வியாளர்கள் எண்ணினர். எனினும் அது நடக்கவில்லை.
ஓராண்டுக்கு விலக்கு
இந்நிலையில் இன்று சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கையில், நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்குக் கோரி தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தால் அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரும். ஆனால் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வாய்ப்பு இல்லை என்றார்.
நாளை தாக்கல்
இதைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் ஆலோசனை நடத்தினார். அதன்பின்பு விஜயபாஸ்கர் கூறுகையில், நீட்டுக்கு ஓராண்டு விலக்கு கோரும் புதிய அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் நாளை தாக்கல் செய்யப்படும். இதற்காக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று இரவு டெல்லி செல்ல இருக்கிறார் என்றார்.