நாளை வீடு வீடாக போலியோ சொட்டு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர்
திரையரங்கு வளாகங்களிலும் போலியோ சொட்டு மருந்து விடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: நாளை மற்றும் நாளை மறுதினம் வீடு வீடாக போலியோ சொட்டு மருந்து விடப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் சுமார் 17 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தருவதற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக 43, 051 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகளிலும் போலியோ சொட்டு மருத்து போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். அந்த முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், திரையரங்கு வளாகங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
நாளை மற்றும் நாளை மறுநாளும் வீடு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து விடப்படும். தமிழகத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் எந்த குழந்தையும் போலியோவால் பாதிக்கப்படவில்லை. தமிழகம் தொடர்ந்து 14 ஆண்டுகளாக போலியோ இல்லா மாநிலமாகவே இருந்து வருகிறது என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.