தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை.. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் கொரோனா வைரஸ் வவ்வாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியதாக கூறப்படுகிறது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் உணவாக உட்கொள்வதால் அவர்களுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.
இது வரை இந்த வைரஸ் பாதிப்பால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். 1500-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
இந்த வைரஸ் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. நோயின் வீரியத்தை கட்டுப்படுத்த கூட முடியவில்லை. ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது போல் சீனாவிலிருந்து பாட்னா திரும்பிய ஒருவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமா என மக்கள் பீதி அடைந்தனர். ஆனால் தமிழகத்தில் நோய் அறிகுறி இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை.
எனவே கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. கொரோனா வைரஸ் நோய் தொடர்பான உதவிகளை பெற 9111-23978046 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஹாங்காங், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தைவானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, சீனாவில் இருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.