"மாஜிகல் கம்பேக்"னா என்ன தெரியுமா?.. விராலிமலை விஜயபாஸ்கர் வெற்றிதான்!
சென்னை: நிச்சயம் இவர் தோற்பார் என்று கூறப்பட்ட ஒருவர் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் மீண்டும் அமைச்சர் பதவியையும் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவர்தான் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். மறுபடியும் அதே பதவியில் அவரை அமர வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
விஜயபாஸ்கரின் வெற்றி சாதாரணமானதல்ல, மிகக் கடுமையான போட்டியையும் சவாலையும், நெருக்கடியைுயும் சந்தித்து வென்றுள்ளார் விஜயபாஸ்கர்.
அவர் தோற்க வேண்டும் என்று தீவிரமாக வேலை பார்த்தவர்கள் பலர் உண்டு. ஆனால் அதையும் தாண்டி, தனக்கு முன்பு இருந்த முத்தரையர் சமூகத்தின் மிகப் பெரிய எதிர்ப்பு என்ற தடையையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளார் விஜயபாஸ்கர். இப்போது மீண்டும் அமைச்சராகியுள்ளார்.
சின்னத்தம்பி மகன்
விஜயபாஸ்கரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் கிராமம். இங்குள்ள அன்னவாசல் ஒன்றிய தலைவராக இருந்தவர் இவரது தந்தை சின்னத்தம்பி. கட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்தவர். பின்னர் திருநாவுக்கரசர் கட்சி ஆரம்பித்தபோது அதில் இணைந்து செயல்பட்டார். சிறு வயதிலேயே தனது தந்தையின் அரசியல் செயல்பாடுகளைப் பார்த்து விஜயபாஸ்கருக்கும் அரசியல் ஆசை தொற்றிக் கொண்டது.
டாக்டருக்குப் படித்துக் கொண்டே
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டாக்டருக்குப் படித்தபோதும் அவருக்குள் இருந்த அரசியல் ஆர்வம் விடவில்லை. தொடர்ந்து அதிமுகவின் செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டே வந்தார், ஆர்வத்தையும் வளர்த்து வந்தார்.
ஜெயலலிதாவை ஸ்டன் ஆக்கினார்
ஒருமுறை சிதம்பரத்திற்கு வந்த ஜெயலலிதா, உப்புக்களால் வரையப்பட்டிருந்த தனது முழு உருவப் படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போய் நின்று சில விநாடிகள் ரசித்தார். இதை செய்தது யார் என்று விசாரித்தபோது இவர்தான் என்று விஜயபாஸ்கரை கொண்டு வந்து அவர் முன்பு நிறுத்தினர். அவரைப் பார்த்து புன்னகை பூத்து விட்டு பாராட்டி விட்டு நகர்ந்தார் ஜெயலலிதா. அதன் பிறகு விஜயபாஸ்கரை நோக்கி கடலூர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் பதவி ஓடி வந்தது.
சென்னையில் உருவம் எடுத்த அரசியல் அபிலாஷை
அதன் பின்னர் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்ற ஆரம்பித்தார் விஜயபாஸ்கர். அங்கு வைத்து மறைந்த காளிமுத்துவின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கு சிகிச்சை அளித்து அவரது மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து ஜெயலலிதாவின் அப்போதைய தனிச் செயலாளர் புலவர் சங்கரலிங்கத்தின் நட்பு கிடைத்தது. இதன் மூலம் மேலிடத்திற்கு நெருக்கமானார்.
2001ல் முதல் வெற்றி
இப்படியாக ஜெயலலிதாவின் நெருக்கமான வட்டத்துக்குள் நுழைந்த விஜயபாஸ்கர் 2001 சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக புதுக்கோட்டையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு அவரது போக்கு மாறியது. புகார்களும் குவியத் தொடங்கின. இதனால் 2006 தேர்தல், 2009 லோக்சபா தேர்தல் என டிக்கெட் கேட்டும் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால் மன்னார்குடி குடும்பத்தின் மூலமாக 2011 தேர்தலில் புதுக்கோட்டையில் மீண்டும் சீட் வாங்கி விட்டார். சுகாதாரத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
முத்தரையர்கள் கோபம்
இந்த நிலையில்தான் அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள், புகார்கள் குவிந்தன. முத்தரையர் சமூகத்தைப் பற்றி இழிவாகப் பேசியதாக பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதனால் ஒட்டுமொத்த அதிமுக மீதும் கறை படிந்தது. ஆனாலும் விஜயபாஸ்கர் சளைக்கவில்லை. கட்சி மேலிடத்தை எப்படியோ சரிக்கட்டி விராலிமலையில் சீட் வாங்கி விட்டார்.
மனைவி, மகள் பிரச்சாரம்
சீட் வாங்கிய பின்னர் வெற்றிக்காக கடுமையாக முயற்சிகளில் குதித்தார். என்ன வழியெல்லாம் உள்ளதோ அதையெல்லாம் செய்து வெற்றிக்கான வாக்குகளைத் திரட்டத் தொடங்கினார். இதற்காக தனது மனைவி ரம்யா, 8 வயது மகள் ஆகியோரையும் கூட பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தமிழகத்தில் போட்டியிட்ட எந்த அதிமுக வேட்பாளருமே செய்யாதது இது. இதனால் விஜயபாஸ்கர் மீது இருந்த அதிருப்திகளின் ஒரு பகுதி ஆச்சரியமாக மாறி அவர் வெற்றியும் பெற்றார். இப்போது மீண்டும் அதே துறைக்கு அமைச்சராகியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு சமீபத்தில்தான் மாவட்டச் செயலாளர் பதவியை இழந்திருந்தார் விஜயபாஸ்கர். ஆனால் மீண்டும் சீட் வாங்கி, போராடி வென்று, மீண்டும் அமைச்சராகியுள்ளார் விஜயபாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.