நெஞ்சு வலிப்பதாக கூறி அப்பல்லோவில் அட்மிட் ஆன 'நத்தம்' .. காலையில் கிளம்பிப் போனார்!
சென்னை: நெஞ்சு வலிப்பதாக கூறி நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை இருப்பதால், மாலையில் வருவதாக கூறி விட்டு காலையில் கிளம்பிச் சென்றார்.
தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். இவர் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தங்கியுள்ளார். நேற்று இரவு அமைச்சருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அமைச்சருக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
காலையிலும் பரிசோதனைகள் நடந்துள்ளன. அதன் பின்னர் தனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை இருப்பதால் போய் விட்டு மாலையில் வருவதாக டாக்டர்களிடம் கூறினாரா் அமைச்சர் விஸ்வநாதன். டாக்டர்களும் அதற்கு அனுமதி தரவே தற்போது அங்கிருந்து கிளம்பி வந்து விட்டார் அமைச்சர் விஸ்வநாதன். இன்று மாலை மீண்டும் அவர் மருத்துவமனை செல்வார் என்று தெரிகிறது.
நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் சேர்ந்து, அலுவலகத்தில் வேலை இருப்பதாக கூறி அமைச்சர் விஸ்வநாதன் கிளம்பிச் சென்றது தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.