அடுத்து.. சசி முதல்வராக வலியுறுத்தி அரங்கேறும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 'ராஜினாமா நாடகம்'?
சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யக் கூடும் என தெரிகிறது.
சென்னை: சசிகலா முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி 3 அமைச்சர்கள் மற்றும் சில எம்எல்ஏக்கள் ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றக் கூடும் என கூறப்படுகிறது.
சசிகலா பொதுச்செயலராக வேண்டும் என போயஸ் கார்டனில் 3 வார காலம் மிகப் பெரிய நாடகத்தை நடத்தியது மன்னார்குடி கோஷ்டி. இதற்காக தமிழகம் முழுவதும் லெட்டர் பேடு கட்சித் தலைவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் சசிகலாவிடம் பொதுச்செயலர் பதவியை ஏற்குமாறு கெஞ்சுவதாக காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து சசிகலாவை அதிமுக பொதுக்குழு பொதுச்செயலராக நியமித்தது.
குழப்பத்தில் தொண்டர்கள்
பொதுச்செயலராக பதவியேற்க வந்த சசிகலா உற்சாகமாக காரைவிட்டு இறங்கினார். அப்போது தொண்டர்கள் அழுவதா, உற்சாகமாக இருப்பதா என தெரியாமல் குழம்பினர். சசிகலாவும் சட்டென சோகமாக முகத்தை வைத்து நாடகத்தை அரங்கேற்றினார்.
அடுத்த கோஷம் ரெடி
அதிமுக நிர்வாகிகளிடையே பேசும் போது இயல்பாக இருந்தவர் திடீரென 5 முறை அழுவதாக காட்டிக் கொண்டார். தற்போது நாடகத்தின் 2-ம் பகுதியாக சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோஷம் வலுத்து வருகிறது.
ரிப்பன் வெட்டி துவக்கிய தம்பிதுரை
இந்த நாடகத்தை அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகிய மூவரணிதான் முன்னின்று நடத்துகிறது. இந்த நாடகத்தை லோக்சபா துணை சபாநாயகர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்துள்ளார். கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்து வருகின்றனர்.
உச்சகட்ட காட்சிகள்
இந்த நாடகத்தின் உச்சகட்டமாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்களை சசிகலாவிடம் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனராம். அனேகமாக அடுத்ததாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ராஜினாமா நாடகம் போயஸ் கார்டனில் அரங்கேறும் என்றே தெரிகிறது. இதில் சில எம்பிக்களும் கூட சசிகலா விசுவாசத்தை காட்ட இணையவும் உள்ளனராம்!
தொடரும் நாடகம்!