தினகரனுக்காக அமைச்சர்கள் திண்ணையில் அமர்ந்து பிரச்சாரம்... ரெஸ்பான்ஸ் செய்வது மூதாட்டிகள் மட்டுமே!
சென்னை: அதிமுக அம்மா அணி வேட்பாளர் தினகரனுக்காக பெரும்பான்மையான அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவர்கள் மக்களுடன் திண்ணையில் அல்லது வாசலில் அமர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் அவர்களைச் சுற்றி வயதான மூதாட்டிகள் மட்டுமே அமர்ந்துள்ளனர்.
சென்னை ஆர்கே நகர் தொகுதியில், இடைதேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக அம்மா அணி வேட்பாளர் தினகரனுக்காக பெரும்பான்மையான அமைச்சர்கள் ஆர்கே நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் மக்களிடம் நோட்டீஸ் விநியோகித்து பிரச்சாரம் செய்கின்றனர். அப்போது மக்கள் வேண்டா வெறுப்பாக புகைப்படங்களுக்கு 'போஸ்' கொடுக்கின்றனர்.
இதில் பெரும்பான்மையான மக்களுக்கு 'இவர், இந்த துறைக்கான அமைச்சர்' என்பது தெரியாத காரணத்தால் பிரச்சாரத்துக்குச் செல்லும் அமைச்சர்களுக்கு சிறப்பு மரியாதையோ, வரவேற்போ கிடைப்பதில்லை.
இந்நிலையில், புதுயுக்தியாக வீட்டுத் திண்ணைகளிலும் வாசலிலும் அமர்ந்து அமைச்சர் உதயகுமார், செந்தில்நாதன் எம்.பி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது அவர்களைச் சுற்றி இளைஞர்களோ பெண்களோ அமர்ந்திருக்கவில்லை. வயதான மூதாட்டிகல் மட்டுமே கதை கேட்பது போல் அமர்ந்துள்ளனர். இது பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது என அங்குள்ள பொதுமக்கள் கமெண்ட் செய்கின்றனர்.