அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சில அமைச்சர்களைக் காணோமே?
தினகரன் - அதிமுக மோதல் வலுத்து வரும் நிலையில், அமைச்சர்கள் சிலர் அவசரக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் போனது சலசலப்பாகியுள்ளது.
சென்னை: தினகரன் - அதிமுக மோதல் வலுத்து வரும் நிலையில், அதிமுக இன்று கூட்டிய அவசரக் கூட்டத்தில் அமைச்சர்கள் சிலர் கலந்து கொள்ளாமல் போனது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற அவசரக்கூட்டத்தை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். தினகரனின் வெற்றி, திமுகவின் சதி என பல பிரச்சனைகள் குறித்து இருவரும் பேட்டியளித்த இந்த சந்திப்பில் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் கலந்துக்கொண்டனர்.
ஆனால் முக்கியமான அமைச்சர்களாக கருதப்படும் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, கே.சி. வீரமணி உள்ளிட்டோர் இந்த அவசரக் கூட்டத்திலும், செய்தியாளர் சந்திப்பிலும் கலந்துக்கொள்ளவில்லை. இது அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பின் போது நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வரும், தங்களின் அணியில் இருப்பவர்கள் அனைவரும் புடம்போட்ட தங்கம் என துணை முதல்வரும் எதிர்வாதமாக கூறியதும் நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழச்செல்வன், இதுவரை 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும், எம்பிகளும் தினகரனின் வெற்றிக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்து கூறியுள்ளதாக கூறினார். இதனால் கட்சித் தாவலுக்கு தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் ரெடியாகி விட்டதாகவும் கருதப்படுகிறது.
தினகரன் தன்னுடைய ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவி இருப்பதாக பகிரங்கமாக பலமுறை தெரிவித்திருந்த நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவின் மூலமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் மாற்றம் நிகழும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சர்களின் இந்த செயல்பாடுகள் ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.