அயயோ.. அமைச்சர் ஜெயக்குமாரை காணோமாம்.. சி.வி. சண்முகத்தையும் காணோமாமே!
அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகிய இருவரையும் காணவில்லை என்று சிலர் புகாருடன் கிளம்பியுள்ளனர்.
சென்னை: அமைச்சர்களைக் காணவில்லை, கண்டுபிடித்துக் கொடுங்க என்று கூறி புகார்கள் சரமாரியாக குவிய ஆரம்பித்துள்ளன. அமைச்சர் செல்லூர் ராஜுவைக் காணவில்லை என்று நேற்று புகார் வந்தது. இன்று அமைச்சர் ஜெயக்குமாரை காணவில்லை என்று கூறி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
சசிகலாவுக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏக்களை கொண்டு ஆடு மாடுகளை அடைத்து வைப்பது போல அடைத்து வைத்து அடை காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வெளியே விடாமல் சிறை பிடித்து வைத்துள்ளனர். அவர்களில் பலர் முதல்வர் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வெளியே வர முடியாமல் அவர்கள் சிறைபட்டுக் கிடக்கின்றனர்.
இந்த நிலையில் எம்.பிக்களும் அடுத்தடுத்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் தாவி வருகின்றனர். இதற்கிடையே மறுபக்கம் எம்.எல்.ஏக்களைக் காணவில்லை, அமைச்சர்களைக் காணவில்லை என்று புகார்கள் கிளம்பியுள்ளன.
அமைச்சர் செல்லூ ராஜூவைக் காணவில்லை, கடத்தி விட்டனர், கண்டுபிடித்துக் கொடுங்க என்று மதுரையில் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரைக் காணவில்லை. கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கோரி சென்னையில் ஒரு புகார் வந்துள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரைக் காணவில்லை. அவரை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அச்சமாக உள்ளது. அவரைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று கோரியுள்ளார் நவீன் குமார்.
சி.வி.சண்முகத்தையும் காணாமாமே!
அதேபோல இன்னொரு அமைச்சர் சி.வி.சண்முகத்தையும் காணோம் என்று சிலர் கிளம்பியுள்ளனர். அவரது போனும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளதாம். சமீபத்தில் நல்ல போதையில் சின்னம்மா.. இல்லை இல்லை.. அம்மாதான் என்று ஆவேசமாக அவர் பேசிய பேச்சு வீடியோவை வைரலாகப் பரவி "வாலிப வயோதிகர்கள்" மத்தியில் பெரும் குபீர் சிரிப்புகளை ஏற்படுத்தி குஷிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது!