தேர்தல் வருதே…. இலவச பொருட்களை கொடுக்க 'தீயா வேலை செய்யும் குமார்(அமைச்சர்)கள்'!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசு அறிவித்த இலவச மிக்சி, கிரைண்டர், ஃபேன் உள்ளிட்ட பொருட்களை அவசரம் அவசரமாக விநியோகிக்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், பொதுமக்களுக்கு இலவசமாக, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மின் அடுப்பை வழங்கி வருகிறது. இவற்றை கொள்முதல் செய்யும் பணியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொண்டு வருகிறது.
நடப்பாண்டில், 1,500 கோடி ரூபாய் செலவில், 35 லட்சம் மிக்சி, கிரைண்டர்; 34 லட்சம் மின் விசிறி; 56 ஆயிரம் மின் அடுப்பு கொள்முதல் செய்ய திட்டமிட்டுஉள்ளது.
இதனிடையே நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இலவசப் பொருட்களை வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துவிடும் என்பதால் உடனடியாக பொதுமக்களுக்கு விநியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இலவசப் பொருட்கள்
கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மலை கிராமங்களில் மின்சார அடுப்பு வழங்கப்படும் என வாக்குறுதியாக அளித்தது. அதன்படி தேர்தலில் வெற்றி பெற்ற உடன் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக இலவசப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களுக்கு லேப்டாப்
பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றாலும் பெரும்பாலான மாணவர்கள் இலவச லேப்டாப் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டம் செய்த மக்கள்
அதேபோல் பெரும்பாலான கிராமங்களில் அரசின் இலவசப் பொருட்கள் கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறி பொதுமக்களும் சாலைமறியல், முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
உளவுத்துறை எச்சரிக்கை
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசின் இலவசம், கிடைக்காமல் போனதால் ஏற்பட்டுள்ள அதிருப்தி, தேர்தல் நேரத்தில் வெளிப்படலாம் என உளவுத் துறையின் தமிழக அரசை எச்சரித்துள்ளனர்.
வீடு வீடாக விநியோகம்
இதனையடுத்து குடும்ப அட்டைதாரர்களின் வீட்டு வாசலுக்கே விலையில்லா இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் போய் விட வேண்டும் என்று தீவிரம் காட்டுகின்றனர் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும்.
தீயா வேலை செய்யணும்...
தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்; அதன்பிறகு இலவசப் பொருட்கள் மக்களுக்குக் கொடுக்க முடியாமல் போய்விடும் என்பதால் வருவாய்த் துறையினர் தீயாய்ப் பணியாற்று கிறார்கள்.
நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ
கடந்த முறை அதிமுக ஆட்சிகாலத்தில் அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன் இந்தமுறை வெறும் எம்.எல்.ஏவாகவே இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றிக் கொடி நாட்டிவிட வேண்டும் என்று ஊர் ஊராக போய் இலவச மிக்சி கிரைண்டர்களை வழங்கி வருகிறார்.
மானூர் அருகே உள்ள வாகைகுளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விழாவில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, 1246 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கினார்
மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ
ராதாபுரம் பஞ்சாயத்து தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடந்தது. பஞ்சாயத்து தலைவர் மதன் தலைமை தாங்கினார். தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து, 2121 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கினார்.
விளாத்திக்குளம் தொகுதியில்....
விளாத்திகுளம் தொகுதியில் பல்வேறு ஊர்களில் நடந்த விழாக்களில் 3,043 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
எட்டையபுரத்தில் எம்.எல்.ஏ
ஜமீன் கோடாங்கிபட்டியில் நடந்த விழாவில், 368 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கப்பட்டன. பஞ்சாயத்து தலைவர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். எட்டயபுரம் அருகே உள்ள நம்பிபுரம் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், 471 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளை வழங்கினார்.
அமைச்சர் ரமணா
ஊத்துக்கோட்டை அடுத்த பேரண்டூர் ஊராட்சியில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு தாசில்தார் கிறிஸ்துதாஸ் தலைமை வகித்தார். அமைச்சர் ரமணா, எம்எல்ஏக்கள் மணிமாறன், பொன்ராஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 792 பயனாளிக்கு இலவச மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவற்றை வழங்கினர்.
ஓடி ஓடி வாங்கிய பயனாளிகள்
திடீரென்று நிறுத்திட்டா என்ன பண்றது என்ற பதற்றத்தில் இலவசப் பொருட்களை வாங்கிய வேகத்தில் அதை வீட்டுக்கு கொண்டு போய் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தனர் பயனாளிகள்.
நெல்லை மாவட்டத்திலுள்ள தென்காசி தொகுதியில் வரும் வீராணம் கிராமம் பஞ்சாயத்தில் ஆர்பாட்டம் செய்தும் கிடைக்காத இலவசப் பொருட்கள் வீட்டுக்கு வந்து கிடைக்கிறதே என்று வாகனத்திலும், கால்நடை யாகவும் விரைந்து மக்கள் வாங்கிச் சென்றர்.
சென்னையிலும் இலவசம்
கடைக்கோடி கிராமத்தில் மட்டுமல்ல தமிழகத் தலைநகரான சென்னையிலும் வீடு வீடாக குடும்ப அட்டைகளை பரிசோதனை செய்து உடனடியாக அரசின் இலவசப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.
தேதி அறிவிப்பு வரைக்கும்
தேர்தல் தேதி அறிவித்து விட்டால் இவற்றை விநியோகிக்க முடியாதே என்ற பதற்றத்தில் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், வருவாய்துறை அதிகாரிகளும் தீயாக வேலை செய்து கொண்டிருப்பதை கடந்த சில நாட்களாக கண்கூடாக பார்க்க முடிகிறது.