அடுக்கடுக்காய் குவியும் புகார்கள்- அடுத்தடுத்து சிக்கலில் அதிமுக மாஜி அமைச்சர்கள்!
சென்னை: தமிழக முன்னாள் அமைச்சர்களான செந்தில்பாலாஜி மற்றும் டி.கே.சின்னையா ஆகியோர் மீது பரபரப்பு புகார்கள் பதிவாகியுள்ளன.
திருவள்ளூர், காஞ்சிபுரம், கரூர், நாமக்கல் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பேர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது உதவியாளர் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அரசு பஸ் போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் மற்றும் மெக்கானிக் வேலை வாங்கித்தருவதாக தங்களிடம் ரூபாய் 1.5 கோடி வரை பணம் வசூலித்ததாகவும், ஆனால் வேலை வாங்கித்தராமல், பணத்தையும் திருப்பித்தராமல்செந்தில்பாலாஜி, கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் ஏமாற்றிவிட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். புகார் மனுவில் பணம் கொடுத்து ஏமாந்த சுமார் 48 பேரின் பெயர் பட்டியலும் இணைக்கப்பட்டிருந்தது.
இதுபோல முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கட்ராமன் ஆகிய இருவர் மீதும், சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நடிகரும், அ.தி.மு.க பிரமுகருமான சரவணன் என்பவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், 15 சவரன் தங்க நகை மற்றும் பல லட்சம் பண மோசடி செய்துவிட்டு டி.கே.எம்.சின்னையாவும், வெங்கட்ராமனும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்து இருந்தார். ஏற்கனவே பல தடவை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தன்னிடம் மோசடி செய்த பணத்தில் ஒரு பகுதியான ரூபாய் 5 லட்சத்தை திருப்பிக் கொடுத்து விட்டனர் என்றும் மனுவில் கூறி இருந்தார். அந்த ரூபாய் 5 லட்சம் ரொக்கப்பணத்தையும் அவர் நிருபர்களிடம் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.