செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசனுக்கு சசிகலா கட்சி பதவி கொடுத்ததும் செல்லாது...அன்வர் ராஜா அதிரடி
சசிகலாவால் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட கட்சி பதவிகளும்தான் செல்லாது என்று ராமநாதபுரம் எம்பி அன்வர் ராஜா தெரிவித்தார்.
சென்னை:சசிகலாவால் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட கட்சி பதவிகளும்தான் செல்லாது என்று ராமநாதபுரம் எம்பி அன்வர் ராஜா தெரிவித்தார்.
சசிகலாவால் தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று எடப்பாடி தலைமையிலான நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இந்த முடிவை ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அமைச்சர்கள் செங்கோட்டையனும், திண்டுக்கல் சீனிவாசனும் கையெழுத்திடவில்லை. இதுகுறித்து அன்வர் ராஜா எம்பி கூறுகையில், அமைச்சர்கள் செங்கோட்டையனையும், திண்டுக்கல் சீனிவாசனையும் சசிகலா கட்சி பதவிகளில் நியமித்ததால் அவர்களது நியமனம் செல்லாது. அதனால்தான் அவர்கள் இருவரும் தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை.
அதனால் அவர்கள் இருவரது நியமனங்களும் செல்லாது. எங்கள் அணியினர் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களால் அதிமுகவின் இரு அணிகளும் இணைவது சாத்தியம். கட்சி இணைப்புக்காக முக்கிய வாசலை திறந்து வைத்துள்ளார் எடப்பாடி. அதன் வழியாக ஓபிஎஸ் உள்ளிட்டோர் உள்ளே வந்தால் அவர்களை வரவேற்போம் என்றார் அன்வர் ராஜா.
ஜெயலலிதா மறைந்தவுடன் சசிகலா அணியில் இருந்து ஓபிஎஸ் விலகியதால் அவர் வகித்து வந்த பொருளாளர் பதவியில் திண்டுக்கல் சீனிவாசனை சசிகலா அமர்த்தினார். அதேபோல் அதிமுக அவைத் தலைவர் பதவிக்கு செங்கோட்டையனை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.