டிடிவி தினகரனுக்கு உதயகுமார் எதிர்ப்பு... ஆதரிக்கும் செந்தில்பாலாஜி
டிடிவி தினகரன் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக அமைச்சர் உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மதுரை: டிடிவி தினகரன் புதிய நிர்வாகிகளை அறிவித்து கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் நிர்வாகிகள் நியமனத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
60 நாட்கள் கெடு முடிந்த பின்னர் நேற்றிரவு திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.
தனக்கு ஆதரவாகச் செயல்படும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவருக்கும் புதிய பதவிகளைக் கொடுத்தார் தினகரன்.
எம்எல்ஏக்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி ஆகியோரை அமைப்புச் செயலாளராகவும், 20க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகளையும் நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
உதயகுமார் எதிர்ப்பு
இதனிடையே நிர்வாகிகள் நியமனத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கருத்து கூறியுள்ளனர். இதேபோல மதுரையில் பேசிய அமைச்சர் உதயகுமார், கட்சிக்குள் கலகம் ஏற்படுத்த தினகரன் முயற்சி செய்வதாக கூறினார்.
ஜெயலலிதாவின் நிர்வாகம்
ஜெயலலிதாவின் நியமனத்திற்கு எதிராக டிடிவி தினகரன் செயல்வடுவதாகவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்வடுகிறது. தினகரனின் நியமனம் நிர்வாகக் குழப்பத்திற்கே வழிவகுக்கும் என்று கூறினார்.
பழனியப்பன் எம்எல்ஏ
புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் தினகரனை இன்று சந்தித்தனர். அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பழனியப்பன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தவே புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார் தினகரன் என்றார்.
செந்தில் பாலாஜி
இதேபோல முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும், தினகரன் அறிவித்துள்ள நிர்வாகிகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தினகரன் மட்டுமே கட்சியை கட்டுப்பாடாக கொண்டு செல்ல முடியும் என்று கூறினார்.