பாளை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தப்பிய சிறுவர்களில் ஒருவன் தற்கொலை முயற்சியால் பரபரப்பு
பாளையம்கோட்டையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வார்டனை தாக்கிவிட்டு தப்பிய நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய சிறுவன் தற்கொலைக்கு முயன்றான்.
தூத்துக்குடி: பாளையம்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து வார்டனை தாக்கி விட்டு தப்பி ஓடிய சிறுவர்களில் கொலை வழக்கில் தொடர்புடைய சிறுவன் தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் நகை கடை நடத்தி வருபவர் செந்தில். கடந்த 30-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கோவில்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த 2ம் தேதி சாத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தான்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து தூத்துக்குடியில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். பின்னர் பாளையங்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு மாற்றப்பட்டான். இந்நிலையில் 13-ஆம் தேதி இரவு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த 12 சிறுவர்கள் காவலாளியை தாக்கி விட்டு சுற்றுச்சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர்.
இதையடுத்து அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டது. தப்பி ஓடியவர்களில் கோவில்பட்டி நகை கடை தொடர்புடைய சிறுவனும் இருந்ததால் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.
நள்ளிரவில் அங்குள்ள புலிகுகை பகுதியில் பதுங்கியிருந்த சிறுவனை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது திடீரென சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது வயிற்றை கிழித்துள்ளான். இதை பார்த்து அதிர்ந்த போலீஸார் உடனடியாக கத்தியை பறிமுதல் செய்து உடனடியாக இரவோடு இரவாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தப்பி ஓடிய இதர சிறுவர்களில் நான்கு பேர் இரவே சிக்கினர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.