ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து... பதறிய நோயாளிகள், உறவினர்கள்
சென்னை : ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, நோளிகள் மற்றும் உறவினர்கள் பதற்றமடைந்தனர். இதையடுத்து நோயாளிகள் உடனடியாக வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 2-வது ‘பிளாக்' கட்டிடத்தின் முதல் தளத்தில் 213-வது வார்டில் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த வார்டில் 8 நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த வார்டில் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் கருவி (வென்டிலேட்டர்) உள்ளது.
இந்தநிலையில் நேற்று இரவு ஒரு செயற்கை சுவாச கருவியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்து தீப்பொறியுடன் கரும்புகை வெளியேறியது.
அந்த கருவிக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் குழாயில் இருந்து பெரும் சத்தத்துடன் வாயு வெளியேறியது. இதனால் அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் பதற்றமடைந்தனர்.
பாதுகாப்பு கருதி உடனடியாக அந்த வார்டுக்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் மருத்துவமனை ஊழியர்களே தீயை அணைத்துவிட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய மருத்துவமனை அதிகாரிகள், செயற்கை சுவாசமளிக்கும் கருவியில் லேசான தீ விபத்து ஏற்பட்டது. நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அவர்களை உடனடியாக வேறு வார்டுக்கு மாற்றிவிட்டோம். நோயாளிகளின் நலன் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றனர்.
எனினும் தீ விபத்தையடுத்து பல மணி நேரத்திற்குப் பிறகே நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் சகஜ நிலைக்குத் திருமபினர்.