பலாத்காரம் செய்தவனுடன் சமரசமா?… மரத்தடி பஞ்சாயத்தை விட மோசமா இருக்கே: லட்சுமி ராமகிருஷ்ணன்
சென்னை: பலாத்காரம் செய்தவனுடன் சமரசமாக சென்று வாழ்க்கை நடத்துவது எப்படி? அந்தப்பெண்ணுக்கு என்று சுய கௌரவம் இல்லையா? என்று நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பலாத்காரம் செய்தவனை தூக்கில் போடவேண்டும் என்று குரல் எழுபப்படும் இந்த காலத்தில் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், இவ்வழக்கை சமரச மையத்துக்கு பரிந்துரை செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார். தீர்ப்பை பற்றி விவாதிக்கும் முன்னர் நடந்த சம்பவத்தை தெரிந்து கொள்வோம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் வி.மோகன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், கர்ப்பமான அந்தச் சிறுமி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று சாதித்தார் மோகன். மரபணு சோதனையில் அது மோகனின் குழந்தைதான் என்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த 2002ம் ஆண்டு மோகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்த கடலூர் மகளிர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தண்டனையை நிறுத்தி வைத்து, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மோகன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ், ‘‘இந்த வழக்கைப் பொறுத்த வரை அப்பாவியான சிறுமியும், அவரது பெண் குழந்தையும் பெரிய கேள்விக்குறியாக உள்ளனர். அந்தச் சிறுமிக்கு பெற்றோர் இல்லை. இது போன்ற வழக்குகளில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மட்டும் பாதிக்கப்படுவார். ஆனால், இவ்வழக்கில் பாலியல் பலாத்காரத்தில் பிறந்த குழந்தையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது, மிகப்பெரிய சோகம்.
குற்ற வழக்குகள் மற்றும் பாலியல் வழக்குகளில்கூட சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெண் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இவ்வழக்கில் சமரச தீர்வு காண முயற்சிக்கலாம். அதற்கு குற்றவாளி சிறையில் இருந்தால் சரியாக இருக்காது. எனவே, குற்றவாளி மோகனுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கப்படுகிறது. சமரச மையத்தின் முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து கூறியுள்ளார்.
|
பலாத்காரம் செய்தவனுக்கு பரிசா?
பலாத்காரம் செய்தவனுக்கு பரிசு பாதிக்கப்பட்ட பெண் அவனுடன் சமாதானமாக செல்வதா? இது என்ன நியாயம் என்று கேட்டுள்ளார்.
|
சுய கௌரவம் இல்லையா?
அந்தப்பெண்ணுக்கு என்று சுயகௌரவம் இல்லையா? பலாத்காரம் செய்தவனுடன் அந்தப்பெண் மனம் ஒன்றிணைந்து வாழ்க்கை நடத்துவாள்? என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எப்படி வாழ முடியும்?
இதனிடையே தன்னால் எப்படி அந்த நபருடன் வாழ முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி. இதே போன்ற நிலை அவரது சகோதரிக்கு நேர்ந்திருந்து அப்போது நீதிமன்றம் இத்தகைய யோசனையை சொல்லியிருந்தால் அதை அவர் எளிதாக ஏற்றுக்கொண்டிருப்பாரா? என்றும் கேட்டுள்ளார்.
என் குழந்தையை தூக்கியதில்லை
அந்த சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகளில் அவர் ஒரு முறைகூட எங்களை திரும்பிப் பார்த்ததில்லை. என் குழந்தையை தொட்டு தூக்கியதில்லை. டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் வெளியாகும்வரை அந்தக் குழந்தை தன்னுடையது அல்ல என்றே கூறிவந்தார்.
சகித்துக்கொள்ள முடியாது
சிறைக்கு செல்லும் முன்னரே சமரசத்துக்கு வந்திருக்கலாமே. சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு ஏன் சமரசம் பேச முயல வேண்டும். சிறைவாசத்தை தவிர்க்கவே இந்த முயற்சியெல்லாம். அவரைப் பார்த்தாலே எனக்கு சகித்துக் கொள்ள முடியவில்லை என்னால் அவருக்கு மனைவியாக வாழ முடியாது என்றும் கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி.
நீதிபதியின் தீர்ப்பு நியாயம் தானா? மரத்தடி பஞ்சாயத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? என்பது பெண்ணியவாதிகளின் கேள்வியாக உள்ளது.