குப்பைக்கு வரி விதிப்பதா.. நாமக்கல்லில், அமைச்சர் தங்கமணியை முற்றுகையிட்ட பெண்கள்
குப்பைக்கு வரி விதிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் தங்கமணியை பெண்கள் முற்றுகையிட்டனர்
நாமக்கல்: வீட்டிலிருந்து கொட்டப்படும் குப்பைக்கு வரி விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணியை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைக்கும் வரி விதிக்கும் நடைமுறை அமலாகியுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குப்பைகளை அள்ளும் பணியில் நிரந்தரப் பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என லட்சக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் தினமும் ஒவ்வொரு வார்டுகளிலும் சாலைகள், குடியிருப்பு பகுதிகள், குப்பைத் தொட்டிகளில் குவியும் குப்பைகள், வீடுகள் தோறும் தள்ளுவண்டியில் சென்று சேகரிக்கும் குப்பைகளை சேகரித்து லாரிகளில் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர்.
இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து குப்பைகளை அள்ளும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை தரம் பிரிப்பதற்கு அதிகமான பொருட்செலவும், மனித வேலைபாடுகளும் தேவைப்படுகிறது.
மேலும், குப்பைகளை தரம் பிரித்து பெறுவதால் குப்பையில் இருந்து உரம், இயற்கை எரிவாயு தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆகும் பொருட்செலவுகளை மக்களிடத்திலேயே வசூலிக்க முடிவெடுத்துள்ள அரசாங்கம், ஒவ்வொரு வீட்டிற்கும், வணிக கட்டிடத்திற்கும் குப்பை சேகரிக்க வரி விதித்துள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பல்வேறு மாவட்டங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு சென்ற அமைச்சர் தங்கமணியை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குப்பைக்கு கூட வரியை விதித்து தமிழக மக்களை அரசு வஞ்சிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.
மேலும் ஊதிய விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், பண விரயமாகும் திட்டங்களை மட்டும் செயல்படுத்தி அரசு தொடர்ந்து ஏழை மக்களை அவதிக்குள்ளாகி வருவதாகவும் பெண்கள் குற்றஞ்சாட்டினர்.