எட்டி எட்டி உதைத்தார்கள்… ரத்தம் வழிய வழிய அடித்தார்கள்…: மு.க. ஸ்டாலின் மிசா நினைவுகள்
மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது ஆயுள் தண்டனை கைதிகளை விட்டு அடித்தார்கள். எட்டி எட்டி உதைத்தார்கள் என்று தனது சிறைச்சாலை அனுபவத்தை நினைவு கூர்ந்தார் மு.க.ஸ்டாலின்.
நெருக்கடி நிலையை நான் நேரிலேயே அனுபவித்தவன். மிசா காலத்தில் சிறை சென்று அதன் கொடுமையை அனுபவித்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு ஜெயலலிதா ஆட்சி காலம் நெருக்கடி நிலையை விட மோசமாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
கலைஞர் தொலைக்காட்சியில் நெருக்கால நினைவுகளையும், சிறைச்சாலை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார் ஸ்டாலின்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு அப்போது ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்வதற்காக நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். தேசிய அளவிலும், மாநிலங்களிலும் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நேரத்தில் டெல்லியில் இருந்து இந்திரா காந்தி 2 தூதர்களை தி.மு.க. தலைவரும் அன்றைய முதல்வருமான கலைஞரிடம் அனுப்பி வைத்தார். அவர்கள், ‘நீங்கள் நெருக்கடி நிலையை ஆதரிக்கா விட்டாலும் பரவாயில்லை. எதிர்க்கக் கூடாது' என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் கலைஞர் அதை ஏற்கவில்லை. ஆட்சி போனாலும் நெருக்கடி நிலையை ஆதரிக்க மாட்டோம்' என்று கூறி விட்டார்.
அஞ்சாத திமுக
நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட மறுநாளே சென்னை கடற்கரையில் தி.மு.க. சார்பில் பிரமாண்ட கூட்டம் நடந்தது. இதில், ‘ஜனநாயகத்துக்கு எதிரான நெருக்கடி நிலையை ரத்து செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக ஆட்சி கவிழ்ப்பு
இதை கலைஞர் வாசித்த போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார்கள். இதையடுத்து இரவோடு இரவாக அன்றைய தி.மு.க. ஆட்சி மத்திய அரசால் கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து கலைஞர் வீட்டுக்கு போலீசார் வந்தனர். அவரைத் தான் கைது செய்ய வருகிறார்கள் என்று நினைத்து ‘என்ன வேண்டும்' என்று கேட்டார்.
கைது செய்ய வந்த போலீஸ்
உடனே போலீசார் முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் ஆகியோரை கைது செய்ய வந்திருப்பதாக தெரிவித்தனர். அதற்கு கலைஞர், ‘முரசொலி மாறன் டெல்லியில் இருக்கிறார். மு.க.ஸ்டாலின் மதுராந்தகத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு சென்றிருக்கிறார் வந்ததும் சொல்லி அனுப்புகிறேன்' என்று கூறினார். மறுநாள் நாங்கள் வந்ததும் போலீசாருக்கு தகவல் சொல்லி அனுப்பினார்.
பாய்ந்த மிசா சட்டம்
இதையடுத்து முரசொலி மாறன், நான் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் 500 பேர் ‘மிசா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்.
பதறிய காமராஜர்
முன்னதாக கலைஞர், பெருந்தலைவர் காமராஜரை சந்தித்தார். அப்போது, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்தார். உடனே காமராஜர், ‘தேசம் போச்சு... தேசம் போச்சு... தமிழ் நாட்டில் மட்டும் தான் ஜனநாயகம் இருக்கிறது. நீங்கள் ராஜினாமா செய்தால் அதுவும் போய்விடும்' என்றார். அதன்பிறகு இந்த சம்பவம் நடந்தது.
கொலைவெறி தாக்குதல்
சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க.வினர் அனைவரும் பல்வேறு சித்ரவதைகளை அனுபவிக்க வேண்டி இருந்தது. நாங்கள் கொடூரமாக தாக்கப்பட்டோம். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளைக் கொண்டு எங்களை தாக்கினர். கொடுமையான தாக்குதல் காரணமாக எனது கையில் காயம் ஏற்பட்டது. அந்த வடு இப்போதும் இருக்கிறது.
ஒருபானையில் சிறுநீர்
சிறைச்சாலையிலே அறையில் இரண்டு பானைகள் வைத்திருப்பார்கள். ஒரு பானையில் குடிநீர் வைத்திருப்பார்கள். ஒருபானையில் சிறுநீர் கழிக்க வைத்திருப்பார்கள். சில நேரம் சிறுநீர் கழிக்க வேண்டிய பானை நிரம்பி அறை முழுவதும் வழிந்து ஓடும். தகாத வார்த்தைகளால் பேசுவார்கள்.
காப்பாற்றிய சிட்டி பாபு
சிறையில் நடந்த கொடூர தாக்குதல் காரணமாக நான் மயங்கி விழுந்தேன். தொடர்ந்து என் மீது தாக்குதல் நடத்த வந்தனர். அப்போது சிறையில் இருந்த சிட்டிபாபு சிறை அதிகாரிகளிடம், ‘ஸ்டாலினை தாக்க வேண்டாம்' என்று கும்பிட்டு கேட்டிருக்கிறார். என் மீது அடி விழாமல் தடுத்திருக்கிறார்.
சிட்டிபாபுவின் மரணம்
என்னை காப்பாற்றுவதற்காக கேட்ட குற்றத்திற்காக அண்ணன் சிட்டிபாபுவை படுக்க வைத்து தாக்கி பூட்ஸ் காலால் தாக்கி வயிற்றில் போலீசார் மிதித்துள்ளனர். இதனால் அவருக்கு வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டு சீழ் பிடித்தது. பின்னர் அவர் உடல் நிலை மோசமானதால் ஆபரேஷன் நடந்தது. என்றாலும் அவர் உயிர் பிழைக்கவில்லை பின்னர் மரணம் அடைந்தார் ஆனாலும் அவரது உடலை எங்களால் பார்க்க முடியவில்லை.
என்னை காத்த சிட்டிபாபு
சிறையில் 3 மாதங்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தோம். சிட்டிபாபு அன்று என் மீது அடி விழாமல் தடுத்ததால் தான் இன்று உயிருடன் இருக்கிறேன். இல்லையென்றால் நான் இருந்திருக்க மாட்டேன். நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது.
நெருக்கடியை விட மோசம்
அம்மையார் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றதும், பின்னர் விடுதலையாகி முதல்வர் ஆனதும், தற்போது அவசரம் அவசரமாக இடைத்தேர்தலை நடத்துவதும் நெருக்கடி நிலையை விட மோசமாக இருக்கிறது. நெருக்கடி நிலையை நான் நேரிலேயே அனுபவித்தவன். மிசா காலத்தில் சிறை சென்று அதன் கொடுமையை அனுபவித்திருக்கிறேன் இன்றைக்கு தமிழகத்தில் அதைவிட கொடுமைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.