தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடி அருகே நோய் பரப்பும் கழிவுகளை கொட்டிய விஷமிகள்
நெல்லை: தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடி அருகே கேரளாவில் இருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட நோய்களை பரப்பும் கழிவுகளை யாரோ கொட்டிச் சென்றுள்ளனர்.
தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரை வழியாக தினமும் கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் மலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் புளியரை வழியாக சென்று வருகின்றன.
கேரளாவில் இருந்து பல்வேறு நோய்களை பரப்பும் புழுக்கள் நிறைந்த கழிவுகளை தமிழகம் வரும் வாகனங்கள் ஏற்றி வந்து புளியரை பகுதியில் கொட்டி செல்வது வாடிக்கையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புழுக்கள் நிரம்பிய கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை இப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து கேரளாவுக்கு திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் 3 சோதனைச்சாவடிகள், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை தாண்டி கொடிய நோய்களை
பரப்பும் புழுக்கள் நெளியும் கழிவுகளை போக்குவரத்து, போலீஸ் சோதனைச் சாவடி அருகே சாலையின் ஓரத்தில் கொட்டி சென்றுள்ளனர். இதனால் தமிழக-கேரள எல்லையில் நோய் பரவும் அபாயமும், சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு செங்கோட்டை தாசில்தார் சங்கரலிங்கம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து கிருமி நாசினி பவுடர் தெளித்து கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனர்.