பொன்னேரியில் ஹெச்.டி.எப்.சி. ஏடிஎம் மையம் மீது கல்வீச்சு- கண்ணாடிகள் உடைந்தன!
பொன்னேரியில் ஹெச்டிஎப்சி வங்கியின் ஏடிம் மையம் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திருவள்ளூர்: பொன்னேரி அருகே ஹெச்.டி.எப்.சி. வாங்கியின் ஏடிஎம் மையம் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
நாடு முழுவதும் நவம்பர் 8-ந் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அப்பொழுது முதல் கடந்த 1 வார காலமாக இந்தியா முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு நாசமாகிவிட்டது.
வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் எடுக்கப்படும் பணத்தின் அளவுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது; அதே நேரத்தில் ஏடிஎம் மையங்கள் பெரும்பாலான இடங்களில் திறக்கப்படாத நிலை இருக்கிறது.
இப்படி பணம் கிடைக்காத விரக்தியில் ஆந்திரா, டெல்லி போன்ற இடங்களில் வங்கிகளையும் ஏடிஎம்களையும் பொதுமக்கள் அடித்து சூறையாடியிருந்தனர். தற்போது திருவள்ளூர் அருகே பொன்னேரியில் ஹெச்.டி.எப்.சி. வங்கியின் ஏடிஎம் மையம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் அந்த மையத்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பணம் கிடைக்காத விரக்தியில்தான் மர்ம நபர்கள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.