மிஸ் கூவாகம்... முதல் மூன்று இடங்களை பிடித்த தமிழக அழகிய திருநங்கைகள்
விழுப்புரத்தை அடுத்த கூவாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் இந்த ஆண்டு முதல் 3 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த அழகிகளே பெற்றனர்.
விழுப்புரம்: விழுப்புரத்தை அடுத்த கூவாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் இந்த ஆண்டு முதல் 3 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த அழகிகளே பெற்றனர்.
விழுப்புரத்தை அடுத்துள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிடையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கொடியேற்றம், தேரோட்டம், திருநங்கைகளின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஆண்டுதோறும் திருவிழா களைகட்டுகிறது. இந்த ஆண்டு கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

வெளிமாநிலத்தவர்
இந்த விழாவில் தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, ஒடிஸா, ஜார்க்கண்ட், சிக்கிம், மிஸோரம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் பங்கேற்றனர். தாய்லாந்து, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

அழகி போட்டி
கடந்த 1993-ஆம் ஆண்டிலிருந்து அதாவது கடந்த 23 ஆண்டுகளாக ஆண்டுதோறும் மிஸ் கூவாகம் அழகிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 8-ஆம் தேதி அழகி போட்டிகள் நடைபெற்றன. காலை 9மணி முதல் 12 மணி வரை இந்த போட்டிகள் இரு சுற்றுகளாக நடைபெற்றன.

மாலையில் முடிவு
நடை, உடை, பாவனை, பொது அறிவு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கிய திருநங்கைகள் மிஸ் கூவாகமாக மாலையில் அறிவிக்கப்பட்டனர். அதன்படி சென்னையைச் சேர்ந்த ஆன்ட்ரியா முதலிடத்தை பெற்று மிஸ் கூவாகமாக அறிவிக்கப்பட்டார். அதற்கு அடுத்த இடத்தில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கவி என்பவரும், மூன்றாவது இடத்தில் மதுரையைச் சேர்ந்த வர்னிகாவும் பிடித்தனர். விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் அழகிகளுக்கு கிரீடங்களை சூட்டினார்.

நாளை தேரோட்டம்
கிருஷ்ண பகவான் மோகினி அவதாரம் எடுத்து அரவானை திருமணம் செய்து கொள்வார். பின்னர் அந்த அரவான் பாரத போரில் உயிர் தியாகம் செய்து விடுவார் என்பது ஐதீகம். அதன்படி இன்று மணக்கோலத்தில் உள்ள திருநங்கைகளுக்கு பூசாரிகள் தாலி கட்டி விடுவர். அதன் பிறகு நாளை அரவான் மரணமடைந்த நாள் அனுசரிப்பையொட்டி அவர்களது ஒப்பாரி வைத்து அழுது, அலங்கோலத்தில் காட்சி அளித்து தாலியை அகற்றிவிடுவர். அதன் பின்னர் நாளை தேரோட்டம் நடைபெறும்.

அடிப்படை வசதிகள் தேவை
இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த திருநங்கைகள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் திரண்டு வரு்ம இந்த விழாவில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். குடிநீர், கழிப்பறை, உடை மாற்றும் அறைகள் ஆகியவற்றை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டுதோறும் விடப்படும் இவர்களது கோரிக்கைகள் வழக்கம் போல் காற்றில் பறக்கவிடப்படுகிறது.












Click it and Unblock the Notifications