விழுப்புரம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கோலாகலம்: மிஸ் கூவாகம் போட்டி தொடங்கியது
மிஸ் கூவாகம் 2018 போட்டியில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்றனர்.
Recommended Video
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவையொட்டி, திருநங்கைகள் குவியத் தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில், கூவாகம், கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெறுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 17-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளும் சாமி திருக்கண் திறத்தல் எனும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. நாளை மறுநாள் தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல மாநிலங்களிலிருந்து ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்து வருகின்றனர்.
இதனிடையே, தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம் இணைந்து நடத்தும் மிஸ் கூவாகம் 2018 நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த இந்நிகழ்ச்சியில், மிஸ்கூவாகம் அழகி போட்டி நடத்தப்பட்டு. 2 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இன்று மாலை போட்டியின் இறுதி சுற்று நடைபெற உள்ளது.
இதில் மிஸ் கூவாகம் 2018-க்கான திருநங்கை யார்? என அறிவிக்கப்பட உள்ளது. மாலையில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைக்கிறார்.