வங்கக்கடலில் 14 மர்ம பொருட்கள் கண்டுபிடிப்பு... மாயமான ஏ.என்.32 விமானத்தின் பாகங்களா? என ஆய்வு
சென்னை: 29 பேருடன் காணாமல் போன இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஏஎன் 32 ரக விமானத்தை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வங்கக்கடலில் சந்தேகிக்கப்படும்படியான 14 பொருட்கள் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய புவியியல்துறை துணைத்தலைவர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 22-ம் தேதி காலை 8.30மணிக்கு சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்ட இந்திய விமானப்படையின் விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே மாயமானது. அதில் இருந்த 29 வீரர்களின் நிலை என்ன என்பது புதிராக இருந்து வருகிறது.
கடலில் விழுந்ததாக சந்தேகிக்கப்படும் அந்த விமானத்தை தேடும் பணியில் போர்க்கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் இதுவைரை காணமல் போன விமானம் குறித்து எந்தவித உறுதியான தகவல்களும் இன்னும் கிடைக்கவில்லை. தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்துக்குச் சொந்தமான 'சாகர்நிதி' கப்பல், மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறைக்குச் சொந்தமான 'சமுத்திர ரத்னாகர்' ஆகிய 2 ஆராய்ச்சிக் கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், 'நிருபக்' என்ற கடற்படை கப்பல், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் என மொத்தம் 4 கப்பல்கள் மாயமான விமானத்தை ஆழ்கடலில் தேடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளன. சென்னையில் இருந்து கடலுக்குள் சுமார் 270 கிமீ தொலைவில் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் சந்தேகிக்கப்படும்படியான 14 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாக இந்திய புவியியல்துறை துணைத்தலைவர் ராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 'சமுத்திர ரத்னாகர்' ஆய்வுக் கப்பல் வங்கக்கடலில் சந்தேகப்படும் படியான 14 பொருட்களை கண்டுபிடித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட 14 பொருட்களும் காணமல் போன ஏஎன் 32 ரக விமானத்தின் பாகங்களா எனவும் ஆய்வு செய்யப்படுகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் 'சமுத்திர ரத்னாகர்' கப்பலுக்கு 14,400 சதுர கி.மீ கடற்பரப்பு ஒதுக்கப்பட்டது. இதில் தற்போது 4,894 சதுர கி.மீ கடற்பரப்பில் தேடும் பணி நிறைவடைந்துள்ளது. மல்டிபீம் எக்கோ, கிரானி மீட்டர் உள்ளிட்ட பல்வேறு கருவிகளைக் கொண்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.