போன உசிரு திரும்பி வந்திடுச்சி.. உதவி செய்த எல்லோருக்கும் நன்றி.. மாயமான ஆசிப் தாய் உருக்கம்
போன உயிர் திரும்ப வந்துள்ளதாக காணாமல் போன 3 வயது குழந்தை ஆசிப்பின் தாய் உசேனா பானு உருக்கமாக கூறினார். குழந்தை கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகளை அவர் தெரிவித்துக் கொண்டார்.
சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து நேற்று காணாமல் போன 3 வயது ஆசிப் என்ற குழந்தை இன்று திரும்ப கிடைத்துள்ளதற்கு போலீஸ் உயர் அதிகாரிகள், பத்திரிகைகள் என அனைவருக்கும் தாய் உசேனா பானு நன்றி தெரிவித்துள்ளார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் உசேனா பானு புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைகாக சென்றிருந்தார். அப்போது குழந்தை ஆசிப்பை உட்கார வைத்துவிட்டு சீட்டு வாங்கச் சென்றார்.
சீட்டு வாங்கிக் கொண்டு திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தை ஆசிப் அங்கு காணவில்லை. இதனால் பதற்றமான உசேனா பானு, போலீசாரிடம புகார் அளித்தார்.
தேடுதல் வேட்டை
இதனையடுத்து போலீசார் 5 தனி படைகளை அமைத்து குழந்தை ஆசிப்பை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இன்று காலை குழந்தை விழுப்புரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.
பெண் கைது
குழந்தை ஆசிப், சுபாஹணி என்ற பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட சுபாஹணியிடம் போலீசாரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
குழந்தை ஒப்படைப்பு
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட ஆசிப்பை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையை பெற்றுக் கொண்ட பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியுடன் குழந்தையை கட்டித் தழுவினர்.
உசுரு வந்தது..
காணாமல் போன தனது குழந்தை கிடைத்த உடன் போன உசுரு திரும்பி வந்தது என்று நெகிழ்ச்சியுடன் கூறிய தாய் உசேனா பானு, குழந்தையை முத்தமிட்டு மகிழ்ந்தார். மேலும் குழந்தை கிடைக்க உதவிய போலீஸ் உயர் அதிகாரிகள், பத்திரிகைகள் என அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.