வித்யாசாகார்..சோனி..என்னங்க! மாயமான விமானிகளை அலையாத்திக் காடுகளில் தேடிய மனைவி..உறவினர்கள்..
சிதம்பரம் : மாயமான டோர்னியர் விமானத்தின் விமானிகள் அலையாத்தி காடுகளில் விழுந்திருப்பார்கள் என்று எண்ணி, அவர்களது உறவினர்கள் அந்த காடுகளுக்கு சென்று விமானிகளில் பெயர்களை உறக்கக் கூப்பிட்டுப்பார்த்தனர்.
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடந்த ஜூன் 8-ம் தேதி இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் குட்டி விமானம் எம்.கே. சோனி, வித்யாசாகர், சுபாஷ் சுரேஷ் ஆகிய மூவருடன் ரோந்து சென்றது. அப்போது சிதம்பரம் அருகே ரேடார் சிக்னல் கிடைக்காமல் மாயமானது.
மாயமான விமானம் சிதம்பரம் நகரத்தின் கிழக்கே 16 கடல் மைல் தூரத்தில் தான் விழுந்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி அந்தப் பகுதியில் 12 இந்திய கடலோர பாதுகாப்புப்படை கப்பல்களும், இந்திய கப்பல் படையின் 6 கப்பல்கள் மற்றும் விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் விமானம் மாயமான பகுதியில் தேடும் பணியை பார்வையிட விமானத்தில் இருந்த மூவரின் உறவினர்கள் விரும்பியதால், சிதம்பரம் அருகே பிச்சாவரம் பகுதியை தேடுதல் பணி குறித்து பார்வையிட விமானத்தில் இருந்த சோனியின் மனைவி அமிர்தா மற்றும் அவரது உறவினர்கள், வித்யாசாகரின் உறவினர்கள் ஆகியோர் வெள்ளிக் கிழமை பிச்சாவரத்திற்கு சென்றனர்.
சுபாஷ்கணேஷ் உறவினர் யாரும் வரவில்லை. பின்னர் அவர்கள் கிள்ளை பிச்சாவரம் படகு குழாமிலிருந்து இருபடகுகள் மூலம் கடலோர காவல் படையினரால் தேடப்பட்டு வரும் பிச்சாவரம் அலையாத்தி காடுகளுக்கு அழைத்துச் சென்று தமிழ்நாடு கடலோரா காவல்படையினர் மற்றும் போலீஸார் சுற்றி காண்பித்தனர்.
மேலும் அப்பகுதியில் தேடப்பட்ட விபரங்கள் குறித்தும் விளக்கமளித்தனர். பிச்சாவரம் அலையாத்தி காடுகளை பார்வையிட்ட பின்னர் அவர்கள் நாகை மாவட்டம் பழையாறு பகுதியை காண புறப்பட்டு சென்றனர்.
சிதம்பரம் அருகே பிச்சாவரம் அலையாத்தி காடுகளில் படகுமூலம் தேடும் பணியை பார்வையிட்ட போது மாயமான விமானத்திலிருந்த சோனியின் மனைவி அமிர்தா, அடர்ந்த காடுகள் பகுதியில் செல்லும் போது தனது கணவர் பெயரை சத்தமாக கூறி அழைத்தது அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது. அலையாத்தி காடுகளில் நடந்து சென்று பார்க்கலாமா என சோனியின் மனைவி அமிர்தா காவல்படையினரை கேட்டார்.
நடந்து செல்ல முடியாது என்பதற்கு காவல்படையினர் விளக்கமளித்தனர். தனது கணவர் இப்பகுதியில் எங்காவது இருப்பாரா என்ற நினைவில் நீண்ட நேரம் அமிர்தா பிச்சாவரம் பகுதியில் பார்வையிட்டு பிரியா மனமில்லாமல் புறப்பட்டு சென்றார்.