மாமிச ஆசையில் கூண்டுக்கு வந்த நேத்ரா புலி… மடக்கி பிடித்த வண்டலூர் பூங்கா ஊழியர்கள்
சென்னை: வண்டலூர் பூங்காவில் கூண்டுக்குள் இருந்து தப்பிய நேத்ரா புலி இன்று காலையில் சிக்கியது. கடந்து மூன்று நாட்களாக அருகில் உள்ள கிராம மக்களை அச்சுறுத்தும் வகையில் போக்கு காட்டி வந்த நேத்ரா புலி சிக்கியதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் வங்கப்புலிகள் இருப்பிடம் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இந்த புலி இருப்பிடத்தை சுற்றி சுமார் 30 அடி அகலத்திற்கு அகழியும், அகழியை சுற்றி 20 அடி உயரத்துக்கு கருங்கற்களால் ஆன சுற்றுச்சுவரும் கட்டப்பட்டு உள்ளது.
வண்டலூர் பகுதியில் கடந்த வாரத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை காலை பூங்காவில் 5 வங்கப்புலிகள் உள்ள இருப்பிடத்தில் அகழியை சுற்றி உள்ள சுற்றுச்சுவரின் அருகே மண் அரிப்பு ஏற்பட்டு 100 அடி தூரத்திற்கு சுற்றுச்சுவர் இடிந்து உட்புறத்தில் விழுந்தது. இதனையடுத்து அங்கிருந்த புலிகள் வெளியேறின.
பூங்கா ஊழியர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள், பூங்கா மருத்துவர்கள் புலி இருப்பிடத்தில் கூண்டிற்கும், வழக்கமான உலவும் பகுதிக்கும் வெளியே உள்ள திறந்தவெளியில் சுற்றித்திரிந்த வித்யா (2), ஆர்த்தி (2), உத்ரா (2), என்ற 3 பெண் புலிக்குட்டிகள் மற்றும் 12 வயது பத்மா என்ற பெண் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் 4 புலிகளையும் அங்கு உள்ள பாதுகாப்பான கூண்டில் அடைத்தனர்.
ஆனால் நேத்ரா என்ற 2 வயது புலிக்குட்டி மட்டும் அதிகாரிகள் கண்ணில் சிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பூங்கா அதிகாரிகள், உடனே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த பகுதியில் வெல்டிங் மூலம் இரும்பு கம்பி வேலியை அமைத்து நேத்ரா புலிக்குட்டி வெளியே தப்பிவிடாமல் தொடர்ந்து ஊழியர்கள் கண்காணித்து வந்தனர்.
சனிக்கிழமை இரவு புதரில் மறைந்து இருந்த புலிக்குட்டி திடீரென வெளியே பாய்ந்து வந்து அதற்கு வைக்கப்பட்டு இருந்த இறைச்சியை கவ்விக்கொண்டு மீண்டும் புதரில் மறைந்துவிட்டது. இதனையடுத்து அன்று இரவே புதரில் இருக்கும் புலிக்குட்டியின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்காக 3 கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு அதில் பதிவாகும் காட்சிகளை அதிகாரிகள் 24 மணி நேரமும் சி.சி.டி.வி.யில் பார்த்த போது புலிக்குட்டியின் காட்சிகள் தொடர்ந்து இரவு நேரத்தில் மட்டுமே பதிவானது.
பகல் நேரத்தில் புலிக்குட்டி புதரில் இருந்து வெளியே வரவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சனிக்கிழமை வழக்கம் போல் பூங்கா இயங்கியது. ஆனால் புலி இருப்பிடங்களை சென்று பார்க்க பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
ஞாயிறன்று புலிக்குட்டியை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் திட்டத்தை கைவிட்டு அதற்கு பதில் அதிகாரிகள் புதிய முயற்சியாக அதனுடைய இருப்பிடத்தில் உள்ள 2 புலி கூண்டில் இறைச்சி வைத்தனர். இந்த இறைச்சியை சாப்பிட வரும் புலிக்குட்டி தனாகவே மாட்டிக்கொள்ளும் என்று அதிகாரிகள் நினைத்தனர்.
வழக்கம் போல் பூங்கா திறக்கப்பட்டது. விடுமுறை நாள் என்பதால் பூங்காவிற்கு அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வந்தனர். இதனால் புலி இருப்பிடத்திற்கு சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் பார்வையாளர்கள் பார்ப்பதற்காக சுவர் இடிந்த போது பிடிக்கப்பட்ட 12 வயது பத்மா என்ற பெண் புலி கூண்டில் இருந்து பார்வையாளர்கள் வழக்கமாக பார்க்கும் திறந்தவெளி பகுதியில் விடப்பட்டு இருந்தது. இதனால் பார்வையாளர்கள் மகிழ்ச்சியுடன் புலியை பார்த்து சென்றனர்.
4-வது நாளான திங்கட்கிழமையன்று காலை 10 மணி வரை 2 கூண்டில் வைக்கப்பட்டு இருந்த இறைச்சியை புலிக்குட்டி சாப்பிடுவதற்கு வரவில்லை. இதனால் புலியை அதிகாரிகள் பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.ஆனந்தன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேரில் வந்து மழையில் இடிந்து விழுந்த புலி இருப்பிடத்தின் சுற்றுச்சுவர்களையும், அந்த இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள புதிய இரும்பு முள்வேலிகளையும் பார்வையிட்டார். பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவான, புதரில் இருந்து வெளியே வந்து சுற்றித்திரியும் நேத்ரா புலிக்குட்டியின் காட்சிகளை அமைச்சருக்கு அதிகாரிகள் காட்டினார்கள்.
ஞாயிறு இரவு 6.53 மணிக்கு புதரில் மறைந்து இருந்த புலிக்குட்டி வெளியே வந்து சுற்றி வருவதையும், பின்னர் மீண்டும் புதர் இருக்கும் பகுதிக்கு திரும்பி செல்லும் காட்சிகளையும், மேலும் நேற்று விடியற்காலை 3.30 மணிக்கு பதிவான காட்சியில் புதர் பகுதியில் புலிக்குட்டி நடந்து செல்வதையும் அமைச்சர் பார்த்தார். புலியை பிடிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலையில் கூண்டிற்குள் வைத்திருந்த இறைச்சியை சாப்பிட வந்த நேத்ரா புலியை ஊழியர்கள் மடக்கி பிடித்தனர்.இதனால் ஊழியர்களும், கிராம மக்களும் நிம்மதியடைந்துள்ளனர்.