விஏஓ ஆபிஸைக் காணோம்.... வடிவேலு பாணியில் போஸ்டர்…– தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலகத்தை காணவில்லை என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு பற்றி கொண்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் போல் பேட்டை, பொன்னகரம், அலங்காரத்தட்டு, செல்வநாயகபுரம், திரேஸ்புரம், இன்னாசியார்புரம், பூபல்ராயர்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கான தூத்துக்குடி பகுதி எண் 1 கிராம நிர்வாக அலுவலகம் செயிண்ட் மேரிஸ் காலனியில் உள்ளது.
இங்கு கிராம நிர்வாக அலுவலராக அமலதாசன் பணிபுரிந்து வருகிறார். இந்த கிராம நிர்வாக அலுவலகம் சரிவர திறக்கப்படுவதில்லை என்று புகார் கூறப்படுகிறது. தனியார் வாடகை கட்டிடத்தில் இந்த கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும், பெயர் பலகையும் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பல்வேறு சான்றிதழ் பெறுவதற்காக வரும் பொதுமக்கள் விஏஓ அலுவலகம் பூட்டி கிடப்பதை பார்த்து ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இந்த காரணத்தால் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், முதியோர் பென்சன் உள்ளிட்ட எந்த சேவையையும் பெற முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் சேர்ந்து போஸ்டர் ஓட்டியுள்ளனர். காணவில்லை என்ற தலைப்பில் ஓட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் அருமை விஏஓ அலுவலகமே உன்னை காணாமல் நாங்கள் திண்டாடி வருகிறோம். எப்போது நீ வருவாய், உன் கையெழுத்துக்காக காத்திருக்கிறோம் என்று எழுதப்பட்டுள்ளது.
நடிகர் வடிவேல் ஒரு படத்தில் கிணற்றை காணவில்லை என்று போலீசில் புகார் கூறும் காமெடி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் தூத்துக்குடியில் விஏஓ அலுவலகத்தை காணவில்லை என்று நகர்முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.